Friday, April 15, 2011

பரிணாம விதி நம் கையில்: Bio-engineering

தெக்கியில் வெளியான துடைத்தழிக்கப்படும் நெல், தான்ய விதைகளுக்கு நம்ம அனலிஸ்ட் ஒரு காணொளி இணைப்பை கொடுத்து ‘பயங்கரம்’ அப்படின்னு சொல்லியிருந்தார். சரின்னு நானும் உடனே பார்க்க ஆரம்பித்தேன். சில விசயங்கள் நம்ப முடியாத அளவிற்கு முன்னேறி எதனையும் எப்படியும் செய்து கொள்ளலாம் அது நம் கண்களுக்கும், வயிற்றிற்கும் மேலோட்டமான கொண்டாட்டத்தை தருவித்து தருகிறது என்றால் என்ற கொள்கையுடன் முன்னேறி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிப்பதாக பட்டது எனக்கு.

என்னுடைய பழைய பதிவொன்றில் இப்படியாக இந்த உயிரிய-தொழில் நுட்பத்தின் கட்டுபாடற்ற மனித கற்பனை எங்கே கொண்டு போயி நிறுத்தலாம் நம்மை என்று விளையாட்டாக கூறி வைத்தேன். ஆனால், அதனை இந்த காணொளி ஆமாம் ரொம்ப பக்கத்திலே வந்திட்டோம்னு சொல்ல வருது.

...Thekkikattan said...

கேளுங்கள் ஆச்சர்யப் பட்டு போவீர்கள். இந்த மரபணு மாற்றுமுறை (selecting the desired genes) மனிதனில் ஆரம்பித்தால் கணினி மென்பொருள் வாங்குவது போல இரண்டு IQ சேர்த்து போட்டு நம்ம பொறக்கப் போற குழந்தைக்கு வாங்க பக்கத்து வீட்டு ராமன் கிட்ட 10000ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு போகலாம் :-)))


அறிவியல் பூர்வமாக பரிணாம வளர்ச்சி என்பது இயற்கையாகவே இருக்கும் சுற்றுப்புற தேவைகளுக்கென இயற்கையே தனது பயணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு பாங்கு, அதில் அழகும், ஆச்சர்யமும் கலந்த கலவையே மிஞ்சி, அன்று வாழும் உயிர்களுக்கு வழங்குகின்ற ஒரு அற்புதச் செயல்.

இது போன்ற பரிணாம மாற்றங்கள் எதனால் நடந்தேறியது என்பதனை நாம் அரிதி கணக்கீட்டு சொல்ல முடிவதில்லை. அது இயற்கை சார்ந்த புரியா புதிர்களில் ஒன்று.

ஆனால் இன்றோ நாம் இந்த பரிணாம விந்தையை நம் கையில் எடுத்துக் கொண்டு இயற்கை கடவுளாக உயிர்களில் மாற்றங்களை கொண்டு சிருஷ்டிக்க ஆரம்பித்திருக்கிறோம். அம் மாற்றங்களின் பக்க விளைவுகளை முற்றிலுமே அறியாமலே, பிரஞையற்று, தன்னிச்சையாக...


Saturday, July 24, 2010

விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

...This post is being transported from Thekki to Nesi, plz excuse if you have read this article already, thanks...


எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.

ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.


அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்...

இந்தப் பதிவு தொடர்பான கருத்துக்களை வாசிக்க இங்கே அழுத்தவும்... to read readers' comments please click here...

P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

....This post is being transported from thekki to Nesi... plz excuse if you have read this post already...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.

உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.
P.S: இதனையொட்டிய கருத்துக்களுக்கு இங்கே அழுத்துங்க... to read the readers' comments please click here.

Saturday, March 06, 2010

விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings

கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!

சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.

இப்படியான பயணங்களில் நாம் அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளின் சத்தமும், சக்கரங்களும் அங்கு வாழும் உயிரினங்களுக்கு எது போன்ற விளைவுகளை விட்டுச் செல்கிறது என்று யோசித்திருக்க வாய்ப்பில்லைதானே. இன்று மனிதன் கால் வைக்காத, வசிக்க முயற்சிக்காத இடமே இந்தப் பூமியிலில்லை என்கிற அளவிற்கு, எல்லா இடங்களிலும் நாம் நிறைந்திருக்கிறோம். இன்றைய உலக மொத்த மக்கள் தொகையாக ஏழு பில்லியன் மக்களைக் கொண்டு நாம் நெருங்கிவருவதாகத் தெரிகிறது.

அதனை ஒட்டிய மனிதத் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடத் தேவையான மக்களின் இடப்பெயர்வு பொருட்டு நமக்குத் தேவையான வாகனங்களின் பெருக்கம், நம் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தொகையை விட அந்நாடுகளில் பெருகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

நாம் அன்றாடம் வாகனங்களில் பயணிக்க நேரும் பொழுது சாலையோரங்களில் ஏதாவது விலங்குகள் அடிபட்டு இறந்து கிடப்பதனை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணி கடந்து போய்விடுகிறோமல்லவா? நம் கண்ணுக்குப் பெரிதாக காணக்கிடைக்கும் விலங்குகளின் உடல் பருமனைக் கொண்டு, அவ்வாறு அடிபட்டு இறந்து போன, அல்லது நம் வாகனத்திலேயே சிக்கிய விலங்குகளைத்தான் அறிகிறோம். ஆனால், அடர்ந்த வனப் பகுதிகளில் பயணிக்கும் பொழுது நம் கவனத்திற்கு வராமலேயே எத்தனையோ விதமான சிறு ஜீவராசிகளான முதுகெலும்பற்ற வகைப்பிராணிகளும் (பூச்சிகள், மெல்லுடலிகள்), ஊர்வன வகை, தவளை, சிறு பாலூட்டிகள், பறவைகளென நசுங்கி இறக்க நேரிடலாம்!

இது போன்ற அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளில் பல இன்னமும் நம் அறிவியல் உலகில் கண்டறியப்படாததாகவும் இருந்திருக்கக் கூடும். என்னுடைய அனுபவத்தில் மழைக்காடுகளின் முக்கியச் சாலைகளின் இருமருங்கும் அடிபட்டு நசுங்கி இறக்கும் வகைகளில் அதிகமாக காணப்பெற்றது, தவளைகளைத்தான். அதுவும் நன்றாக மழை பெய்யும் காலங்களில், சற்றே கூடுதலான எண்ணிக்கையில் கண்டிருக்கிறேன்.


இந்தத் தவளைகள் இயற்கையின் நாடித் துடிப்பறியும் ஒரு மானியைப் (indicator species) போன்றது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. அவைகளில் பல வகையான தவளைகள் இன்னமும் நம் ஊர்க்காடுகளில் அறிவியல் உலகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையின் உணவுச் சுழற்சியிலும், விதை பரவலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கலாம். இது தவளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏனைய வித அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற ஜீவராசிகள் தொடர்ந்தே இருந்திருக்க வேண்டிய வனங்கள், துண்டாடப்பட்டு சிறு சிறு தீவுகளாக (fragmented landscape) மிக நீண்ட இடைவெளிகளைக் (தேயிலை, காப்பி) கொண்டோ அல்லது வாகனங்கள் செல்லுவதற்கான சாலைகளை அமைத்தோ காடுகள் துண்டாடப்படுவதால், இந்தச் சிறு உயிரினங்கள் நேரடியாக நமது பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

அண்மையில் அமெரிக்கா, இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு சார்ந்து 11 மைல்கள் நீண்ட சாலையில் 17 மாதங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவ்வாராய்ச்சியின் முடிவாக கண்டறியப்பட்டது நம்மையெல்லாம் ஒரு கணம் திகைக்கச் செய்வதாக அமைகிறது. இந்த 11 மைல் நீண்ட சாலையில் மட்டுமே கிட்டத்தட்ட 10,500 விலங்குகள் அடிபட்டு மரணித்ததாக அறியப்பட்டது. இவைகளில் தவளையினங்களில் மட்டுமே 7,600ஆகவும் அவைகளில் பெரும்பாலானவை அது என்ன வகைத் தவளை என்று கூட அறிந்திருக்கவில்லையாம். ஏனைய எண்ணிக்கையை மற்ற இன வகை உயிரினங்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மேலே கூறிய ஆராய்ச்சி குளிர்கால நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டதன் முடிவு; அந்த நாட்டுக் காடுகள் வெப்பமாறாக் காடுகளைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஜீவராசிகளை கொண்டிருப்பதில்லை. இந்தியா, இலங்கை போன்ற மழைக்காடுகளைக் கொண்ட நாடுகளில் வாகனங்களால் மரணத்திற்குள்ளாகும் விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் பல வகை சிறு விலங்கினங்கள் தினமும் பெருமளவில் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாமோ என்றளவில் கூட எண்ணச் செய்கிறது.

பெரும்பாலும் சாலைகள் மிகக் குறுகலாகவும், வளைவுகளுடனும் இருக்கும் பொருட்டு குறுக்காக கடக்கும் பெரிய, சிறிய உயிரினங்களுக்கு விபத்து நடந்து விடாமல் கடந்து செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பதில்லை (வாகன ஓட்டிக்கும் கூட). அந்நிலையில் பெரிய விலங்கினங்களான மான், காட்டெருமைகளும் கூட இது போன்ற ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துவிடுவதுண்டு.

நமக்கு மன மகிழ்வூட்டும் போக்கிடங்கள் தேவைதான் என்றாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மென்மேலும் தொடராமல் இருக்க நம்மால் இயன்ற அளவிற்கு வாகன நெரிசல்கள் அது போன்ற மலைஸ்தலங்களில் பெருகாமல் இருக்க முடிந்த வகையில் உதவலாம். வனச்சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களின் வேகத்தை ஒரு மட்டுக்குள் ஓட்டிச் செல்வதும் பெரிய விலங்குகள் விலகிச் செல்ல போதுமான அவகாசத்தைக் கொடுக்க உதவலாம். மழைக்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பிறகு அவ்வூர்களுக்குச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இருக்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பற்ற நிலையில், இது போன்ற சிறு உயிரினங்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியே!

பி.கு: ஈழ நேசனுக்காக எழுதியது. நன்றி!

Wednesday, December 16, 2009

பரிணாமப் பின்னணியில் பறவைகளின் ஒலி : Birds Vocalization

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.

இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஒரு இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்கு பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரம் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

இயற்கையில் எல்லாவிதமான உயிரனங்களிலும் பால் சார்ந்து ஆண்/பெண் உடலமைவிலும், நிறத்திலும், குரலிலும் வித்தியாசம் அமைத்தே காட்டுகிறது. இதற்கு பறவைகளும் விதிவிலக்கல்ல! பறவை இனங்களில் ஆண் பறவைகளை பெண் பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல வண்ணங்களுடனும், சற்றே உடல் பருமனுடனும் ஆண் பறவைகள் இருப்பதனைக் காணப்பெறலாம்.

இவ்வாறான இயற்கை அமைவை பரிணாமப் பார்வை கொண்டு பார்த்தால் அது பால் தேர்ந்தெடுப்பு (sexual selection) காரணங்களுக்காக அமைந்ததாகப்படுகிறது. இயற்கையின் பொருட்டு இந்த மானுடம் மட்டுமே சற்றே விலகிய பாதையைத் தேர்ந்தெடுத்து இது போன்ற காரணிகளை புறந்தள்ளி தாமாக அமைத்துக் கொண்ட சுயநல போக்குப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு சில விசயங்களில் அந்த விலங்கினங்களின் உலகத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்று நிரூபிக்காமல் இல்லை.

விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு. அந்த நிலையில் தன் இனத்தை அவை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல சரியான வாரிசுகளை தேர்ந்தெடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறான அமைப்பில் இனப்பெருக்கத்தின் பொருட்டு பெண் சரியான, வலிமையுள்ள, குரல் வளமிக்க, அழகுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் பொருட்டு ஆண் உயிரினங்களும் கடுமையாகப் போராடி தன்னுடைய சக இனத்திற்குள்ளேயே இருக்கும் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு தன்னை நிலை நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஏன் ஆண் பறவைகள் அவ்வளவு வண்ணங்களுடனும், நல்ல குரல்வளத்துடனும் இயற்கையில் அமைந்து பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். அவ்வாறானமைவில் ஆண் பறவைகள் எழுப்பும் தனிப்பட்ட ஒலி எங்கோ அமர்ந்திருக்கும் தன் இன ஆண் எதிராளிக்கு ஒரு அபாய முன் எச்சரிக்கையாகவும், பெண் பறவையை கவர்வதற்கான பிரத்தியோக ஒலியாகவும் கூட அமையலாம்.

இந்த ஒலிகள் பல விதங்களில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான ஒலிக் குறிப்புகளுடன் அமைந்திருக்கிறது. வானம்பாடி(Skylark) என்ற பறவைகளினத்தில் கிட்டத்தட்ட 300 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளுடன் அவைகள் சத்தம் எழுப்புவதாக அறியப்படுகிறது. சிவப்புக் - கண்ணுடைய விரியோ (Red-Eyed Vireo) என்ற வகைப் பறவை ஒரு நாள் ஒன்றிற்கு சராசரியாக 20,000 முறை பாடுகிறதாம். இதன் மூலமாக பெண் பறவைகளுக்கு ஆண் பறவை இருக்கும் இடத்தில் உள்ள உணவின் தாராளத்தன்மையையும் அறியப்படுத்துகிறதாம். தொடர்ந்து இது போன்ற ஒலியை எழுப்பும் ஆண் இறுதியாக பெண் பறவையை கவரும் வாய்ப்பையும் அதிகம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒலிகள் சில நேரத்தில் மிகவும் சிக்கலான குறிப்புகளையும், எளிமையான ஒலிக்குறிப்புகளையும் கொண்டதாகவும் இருக்கிறது.

அது போன்றே மரங் கொத்திகளும் (Woodpeckers) நன்றாக காய்ந்து வெற்றிடமாக உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தி ஒலியெழுப்புகிறது என்பதும் இதில் அடங்கும். அவைகள் சமயத்தில் ஒரு நொடிக்கு 15 முறை கூட கொத்தி தன் எல்லையை (territory) பிற ஆண் பறவைகளுக்கு அறிவிப்பதாகவும், தன் ஜோடியை நாடி வரச் செய்யும் புணர்ச்சிக்கான அறிவிப்பாகவும் (courtship display) செய்து கொள்கிறது.

வானம்பாடி ஆண் பறவைகள் ஒலியின் நீட்டிப்பை குறுக்கியும், தடித்தும் எழுப்புவதின் மூலம் அது தனது இன மற்ற ஆண் பறவைகளை தன்னுடைய எல்லைக்கு அப்பால் ஒதுங்கிச் சென்றுவிடுமாறு எழுப்பும் அபாய ஒலியாக அமைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தன் அருகாமையே அவை அவைகளுக்கென உள்ள எல்லைக்குள் வசிக்கும் பிற ஆண் பறவைகளுக்குள் வட்டார வழக்கு(dialect) ஒலிகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதிதாக தன் எல்லைக்கு அப்பாற்பாட்ட மற்றொரு இடத்திலிருந்து தவறுதலாக அந்த வட்டாரத்திற்குள் ஏதேனும் அதே இன ஆண் பறவைகள் வந்திருக்குமாயின் இதுபோன்ற சிறப்பு ஒலியமைவுகளை கிளப்பி அவைகளை பிரித்தறிய பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இது போன்ற குழு அமைப்பு அவைகளுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாக பரிணாமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.

இத்தனை ஆர்பாட்டங்களும் எதன் பொருட்டு அமைகிறது என்றால், பெண் பறவைகள் ஒரு ஆண் பறவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அந்த ஆண் எத்தனை பெரிய எல்லையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது, எது போன்ற ஒலிக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, வண்ணத்தின் அடர்வு அதனை வெளிக்கொணரும் தன்மை, அதன் உடல் வலிமை மற்றும் பருமன் இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இனப் பெருக்கத்திற்கான அடுத்த நகர்வான புணர்ச்சிக்கு பெண் பறவைகள் வழிவிடுகிறது.

இயற்கையின் எதார்த்த உலகிலிருந்து இது போன்ற சிறிய விசயங்களை கவனிப்பதின் பொருட்டு நாம் புரிந்து கொள்வதற்கும், விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய உள்ளது. மாறாக, சற்று நின்று நிதானித்து கவனித்தால் நவீன தேவைகளுக்கென மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஆரோக்கிய அமைவிலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு சென்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.


பி.கு: ஈழநேசனுக்காக எழுதியது! நன்றி!

Friday, August 28, 2009

காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire

அண்மைய காலங்களில் உலகம் தழுவிய முறையில் காடுகளில் அதி ஆக்ரோஷமான முறையில் காட்டுத்தீ ஏற்படுவது என்பது நடைமுறையாக உள்ளது. அப்படியெனில், முன்னைய காலங்களில் இது போன்ற காட்டுத்தீக்கள் இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஆனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஏன் இப்பொழுது மட்டும் ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட வெளிகளைச் சாம்பலாக்கிச் செல்வதும் பலத்த பொருளாதார இழப்புகளையும் சில சமயங்களில் மனித உயிர்களைக் காவுகொண்டும் அழிவை ஏற்படுத்துகிறது?

இதற்குரிய காரணங்களில் முதன்மையானதாக நிற்பது உலகச் சூடேற்றம். அதனையடுத்து நீண்டு போன வறண்ட கோடைக்காலம். இவைகளன்றி வட அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காட்டுத்தீ கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காரணமாகின்றன. இவை அந்த நேரத்தில் பெருமளவில் காட்டுத்தீயை நன்றாகவே கட்டுக்குள் வைக்க உதவின. ஆனால் இன்று அவையே கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் அமைகின்றன.

இன்று பெருகிவரும் மக்கட் தொகையும் அவர்களுக்கான தேவையும் பல்கிப் பெருகிப் போக, வனப் பகுதிகளுக்குள்ளும் மனித வாழ்விடங்கள் பன்முகமாக காலுன்றியதும் ஒரு வகையில் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாக உள்ளது.

பொதுவாக காட்டுத்தீ, காடுகளில் ஏற்படுவது இயற்கையின் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அது போன்ற தீக்கள் இயற்கையில் மின்னலின் மூலமாகவும், பாறைகள் எப்பொழுதாவது உருள்வதால் ஏற்படும் உரசலால் உருவாக்கப்படும் தீப்பொறிகள் மூலம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு காட்டுத்தீக்கள் ஏற்படுவதினால் பல நன்மைகளும், சில தீமைகளும் இயல்பாகவே பக்க விளைவுகளாக விட்டுச் செல்லப்படுகின்றன. சில மரங்கள் இத்தீக்களைத் தாண்டியும் நிற்கும் திறனுடையதாக தகவமைவுகளை இயல்பாகவே பெற்றிருக்கின்றன.

சில நேரங்களில் இத் தாவரங்களின் இனப் பரவலுக்கும் இத் தீக்கள் உதவலாம். தீக்கு முன்பு வரை அங்கு வாழும் தாவரங்களில் சிலவற்றுக்கு வெளிச்சமே கிடைக்காமல் வெளிக்கிளம்ப முடியாதவைகளாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி பன்முக வழியில் தாவரங்கள் மீண்டும் செழித்து வளர ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும், தேவையில்லாத அடர்ந்த ஊடு தாவரங்களை விலக்கி அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவும் காட்டுத்தீ ஒரு காரணியாக அமையலாம்.

அதற்கு நேர்மாறாக தீமைகள் என்று பார்த்தோமானால், அதீதமான கட்டுக்கடங்காத தீ பெரும் பரப்பினையும் அதனூடாக வாழும் சிறு ஜீவராசிகளையும் அழித்துவிடுகிறது. மேலும் அடிக்கடி இது போன்ற தீ ஏற்படுமாயின் சிறு தாவரங்களின் வளர்ச்சிநிலை குறுக்கப்படுகிறது. நம் பங்கிற்கு மனிதருடைய இழப்பாக வீடுகள் அதனையொட்டிய வியாபாரத் தளங்கள், மர வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் பங்கு இந்தக் காட்டுத்தீ உருவாக்கத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதி நவீன தீயணைப்பு வசதியும் (மேற்கத்தியநாடுகளில்), அடர்த்தியான ஊடு தாவரங்களுடன் இருக்கும் வனங்களே அழகான, உற்பத்தித் திறன் மிக்க வனங்களாக அமையும் என்ற அணுகுமுறை ஆரம்ப கால கட்டத்தில் நிலவியது. நினைத்தபடியே அமைந்தாலும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை அந்த அணுகுமுறை தருவிப்பதாக அமைந்தது.

எப்படியெனில், இயற்கையின் அமைவில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒருமுறை இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்களால் தேவையற்ற ஊடு தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அவை எட்டி வளர்ந்து பெரும் மரங்களின் நுனிக் கிளைகளைத் தொட முடியாத நிலைமை இருந்ததால் பெரும் மரங்கள் இத்தீக்களுக்கு இரையாகாமல் தப்பும் வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் பின்னர் கொண்டுவரப்பட்ட புதுவிதமான அணுகுமுறை மூலம் நன்றாக தீயை எளிதில் கவர்ந்து கொள்ளும் வகையில் அடர்த்தியான ஊடு தாவரங்களும், குறிப்பிட்ட மர வகைகளை வெட்டி அதன் தண்டுப் பகுதியை எடுத்துக் கொண்டு மிச்சம் உள்ள பகுதிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதும் பெருமளவில் தீயின் உக்கிரத்தை அதீதப் படுத்துகிறது.

இன்னொரு காரணம் நம்முடைய கவனக்குறைவால் ஏற்படும் தீ. வனப்பகுதியில் பயணிக்கும்
பொழுது எனக்கென்ன என்று தூக்கியெறியும் சிகரெட் துண்டங்கள், சுற்றுலாவுக்கோ வேறு தேவைக்கெனவோ அமைக்கப்படும் முகாம்களில் ஏற்படுத்தப்படும் தீயிலிருந்து ஏற்படும் காட்டுத்தீ, அதற்கெல்லாம் மேலாக வேண்டுமென்றே வைக்கப்படும் தீ, வனத்தினூடாகச் செல்லும் தனிவான மின்சாரக் கம்பிகளிலிருந்து உருவாக்கப்படும் தீ என்று பலவிதங்களில் எமது கவனக்குறைவால் காட்டுத்தீக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுக்குள் வைப்பதனைக் கருத்திற்கொண்டு 'குறிப்பிட்ட மர அகற்றல் (selective tree felling)' என்ற புதுவிதமான நுட்பத்தை அணுகுகிறார்கள். இதன் மூலமாக பெரும் மரங்களுக்குத் தீ பரவும் தன்மையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுண்டு.

இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் அமையும் மழைக்காடுகளில் ஏற்படும் தீ, இயற்கையாக ஏற்படுவனவாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. சில நன்மைகள் மேற்கூறிய முறைகளில் கிடைத்தாலும், ஒவ்வொரு முறை இது போன்ற தீக்கள் ஏற்படும் பொழுதும் வெளிவிடப்படும் அதிகூடிய வெப்பம் (சில சமயம் 1000 இலிருந்து 2000 பாகை·பாரன்ஹீட்) தாவர வகைகளின் விதைகளைக்கூட அழித்து விடுகிறது. தீக்குபிறகு அங்கு வாழும் பன்முகப் பறவை மற்றும் சிறு விலங்குகளின் இன வகைகளில் மாற்றங்கள் பெரிதாக நடைபெறா விட்டாலும், உணவாகக் கிடைக்கும் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டு அதன் கூட்டமைவில் சில மாற்றங்கள் அமையக் கூடும்.

குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட நாடுகளில் உள்ள காடுகளைப் போலன்றி, வெப்ப மழைக்காடுகள் அதிக ஜீவராசிகளை - மர உச்சியிலிருந்து அழுகி வரும் இலை தழைகளுக்கிடையேயுமாக எங்கும் எப்பொழுதும் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்றே தாவர இனங்களும் செழித்து இருப்பதால் மழைக்காடுகளில் இது போன்ற தீயும் பெரும் சேதத்தினை உருவாக்கி விடுகிறது, அதுவும் இயற்கையாகவே நிகழும் நிலையிலே கூட. இத் தருணத்தில் மனிதனின் தவறுகளால் நிகழும் காட்டுத்தீக்களும் சேர்ந்து கொண்டால் நம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

இச் சூழலில் நம் பொறுப்புணர்ந்து நம்மால் காட்டுத்தீக்கள் உருவாக்கப்படாமல் தவிர்ப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.



Tuesday, August 18, 2009

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!



Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.
Related Posts with Thumbnails