Tuesday, August 18, 2009

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!



5 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

இத்தகைய பலக்கொடி ஆண்டு வளர்ச்சியை மதிக்காமல், மனிதன் புரியும் மடத்தனங்களை நினைத்தால் மனம் பதறுகிறது.
என்னுடைய 'தீர்க்கதரிசி' ( http://theerkadharisi.blogspot.com/ ) வலைப்பூவில் உள்ள வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அறிவுக்கண்களை திறக்கும் உங்களின் பதிவுகள் அருமை. உங்களின் பணித் தொடர வாழ்த்துக்கள்.

இயற்கை நேசி|Oruni said...

வாங்க M.S.E.R.K. கொஞ்சமாவது நமக்குப் புரிந்ததை ஞாபகமூட்டிக் கொண்டே இருப்போமே என்றுதான் இது போன்ற கட்டுரைகளும் வந்து கொண்டே இருக்கிறது :-).

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நீங்களும் நல்ல சேவைதான் செய்து வருகிறீர்கள், வந்து பார்த்தேனே. உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!

முகுந்த்; Amma said...

பரிணாம வளர்ச்சி பற்றிய தங்களின் பதிவு அருமை. பாக்டீரியா வில் இருந்து மனிதன் வரை இயற்கை உருவாக்கிய வளர்ச்சி வியப்புக்கு உரியது. இது போன்ற பதிவுகள் இயற்கையின் சக்தியை நமக்கு நினைவு படுத்தும்.

vasu said...
This comment has been removed by the author.
Unknown said...

சரி பரிணாம வளர்ச்சியில் எல்லாம் மாற்றம் அடைந்த போதும் இப்போது இருக்கும் மனிதன் ஏன் வேறு பரிணாமம் அடையவில்லை? ஏன் தடைபட்டது?

Related Posts with Thumbnails