Sunday, April 19, 2009

பறவை பார்த்தல்: Birding as a Hobby!

எனக்கு நல்லா நினைவிருக்கு 1990கள் வரைக்கும் என்னய சுத்தி ஒரு பத்தில இருந்து பதினைஞ்சு வகையான பறவைகள் இருக்கலாங்கிற வரையான ஒரு பொது அறிவு இருந்ததாக. ஆனா, மயிலாடுதுறையில ஏ.வி.சி கல்லூரியில வனவியல் முதுகலைப் பட்டப் படிப்புக்கு சேர்ந்ததற்கு பிறகுதான், பறவைகளைப் பத்தி படிக்கிறதுகின்னே ஒரு துறை இருப்பதாகவும் அதுக்கு பறவையியல்னும் (Ornithology) தெரிய வந்துச்சு.

அந்த சமயத்திலதான் எனக்கு பைனாகுலர் (Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி?), பறவைகளை அடையாளம் காண்பதற்கென உள்ள தள கையேட்டுப் புத்தகங்கள்(field guide) எல்லாம் கண்ணில தட்டுப்பட ஆரம்பிச்சுச்சு. அந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக சில சமயங்களில் அருகாமையே உள்ள வயல், கன்மாய்கள், தடாகங்கள், ஊருணிகள், வயல்வெளிகள்னு அந்தக் கல்லூரியை சுத்தி அமைந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று பறவைகள் பார்க்கும் சந்தர்ப்பமும்கிட்டியது. அதுவே கொஞ்ச கொஞ்சமா பழக்கமாகி, பின்னாடி பார்த்தீங்கன்னா நூலகத்திலருந்து பைனாகுலரும், கையேட்டுப் புத்தகமும் கடன்வாங்கி சொந்த ஊருக்குப் போகும் பொழுது கூட அங்குள்ள வயல் வெளிகளில் பறவைகள் தேடி நடக்கிற அளவிற்கு ஆர்வம் வந்துருச்சு.

அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.

நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.

ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.

ஆனால் அந்தப் பறவையின் பறப்பு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அது, அதன் மேல் இறக்கைப் பகுதியில் செங்கல் நிறந்திலமைந்த திட்டான இறகுகளின் இருப்பை உறுதிப் படுத்தியது. இப்படியாக அந்தப் பறவையை பின் தொடர்ந்து, தொடர்ந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர்கள் போயிருப்பேன். நேரம் ஓடியதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து காலை உணவுக்கு அமரும் பொழுது நேரம் முன் மதியத்தைத் தொட்டிருந்தது. இப்படியாக நிறைய நாட்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடந்ததுண்டு. பின்பு அந்தப் பறவை பற்றிய குறிப்புகளுடன் கையேட்டை வைத்து அறியும் பொழுது அது Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து) என்பதாக தெரிய வந்தது. மேலும், கொஞ்சம் கவனத்துடன் ஆராய்ந்தால் அடிக்கடி காணக்கிடைப்பதென்றும் அறிந்தேன். என் ஆசையில் மண்!

பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில், தினமும் புதிது புதிதாக பறவைகளைக் கண்டு நம்முடைய பட்டியலில் சேர்ப்பதில் ஒரு விதமான கிறக்கம் இருக்கும். அதுவே எனக்கும் நடந்தது. அது வீங்கி நீல்கிரீஸ்ல் வைத்து மேற்கு மலைத்தொடரில் காணக்கிடைக்காதென எண்ணியிருந்த ஒரு "ஸ்ரைக்" வகைப் பறவையை மீள் கண்டெடுக்கும் வரைக்கும் சென்றது.

ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.

ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.

பறவைகள் கவனிப்புக்கு தேவையானது என்னன்னு பார்ப்போம். குறைந்த பட்சம் 8 X 32 or 8 X 42 அளவீடு கொண்ட பைனாகுலர். ஒரு நோட்டுப் புத்தகம், பென்சில், ஒரு நல்ல தள பறவைகள் கையேடு எல்லாத்துக்கும் மேலா ஆர்வம் இன்னும் பெரிய அளவில ஆர்வம். அவ்வளவே!

அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.

ஒவ்வொரு குடும்ப பறவைக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான பழக்க வழக்கமிருக்கும் அல்லது அதனோட உடல் புற உறுப்புகளே கூட அதன் வாழ்வு முறைக்கு தகுந்த மாதிரி அமைஞ்சிருக்கும். உதாரணமா பார்த்தோம்னா: கிளைகள் மாதிரியான ஏதோ பிடிமானத்திற்கு ஏற்ற விசயங்களை பற்றிக்கிட்டு அமர்கிற பறவைகள் (perching bird =மைனா, ஸ்ரைக், புல்புல், சாம்பல் நிறக் குருவி, கருங்குருவி...). இந்த வகைள்தான் பறவைகள் இனத்திலயே அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகாமையில் காணக்கூடிய பறவைகளுக்கு பொதுவாக கால்கள் நீளமாவோ, அல்லது அலகுகள் வளைந்தோ, நல்ல தட்டையாகவோ, அலகுக்கு கீழ் பையுடனோ காணப்படலாம். இப்படியாக அவைகளை பிரிச்சறியலாம்.

இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா, அதன் அலகின் அமைப்பு, நெஞ்சுப் பகுதியின் நிறம், வால் அமைப்பு, அங்கு ஏதாவது வரியாகவோ அல்லது பட்டைகள் ஏதும் காணப்பெற்றதா, பறக்கும் பொழுது கீழ் இறகுகளின் நிறம் குறிப்பிடும் படியாக எதாவது என்று நன்றாக கவனித்து கிறுக்கி வைச்சுக்கோங்க. முடிஞ்சா படமாவே வரைஞ்சு கூட வைச்சுக்கலாம். எங்கே எந்த நேரத்திற்கு பார்த்தீங்க, பறக்கும் பொழுது எப்படி பறந்துச்சு. நேர் கோட்டில் போன்றமைவிலா அல்லது மேலும் கீழுமாக இறங்கியா போன்ற குறிப்புகளும் உதவலாம் கையேட்டில் அந்த பறவையை பின்பு அடையாளப்படுத்த எத்தனை விதமான குறிப்புகள் இருந்தாலும் அது மேற்கொண்டு அடையாளப் படுத்துவதில் மிகவும் உதவும்.

இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!

Sunday, April 12, 2009

வண்ணத்துப் பூச்சியின் உலகமும், பெண்களும்...!

வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!

இப்போ இதப்பத்தி என்னாத்துக்கு இங்கே பேசுறேன்னு கேக்கப் போறீங்களா? இருங்க, நான் இன்னும் இயற்கை நேசி தளத்தை மறந்துடல. இங்கே நிறைய எழுதப்பட வேண்டியிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு பதிவில இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ...

...//ஊர்ந்திடும் புழுவிலிருந்து நேர்முறையில் மாறிப் பறந்திடும் பட்டாம்பூச்சி அடுத்த பிறவியாக உருவாகிறது. ஆனால் பட்டாம்பூச்சி தன்னினம் பெருக்க முட்டை இடுவதுமில்லை //...

படிச்சவுடன் ஏற்கெனவே இந்த பூச்சிகளின் உலகம் ஒரு புரியா அதிசிய உலகம் அதிலும் குறிப்பாக இந்த வளர்சிதை மாற்றத்துனூடாக வரும் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை ரொம்ப ஆச்சர்யமூட்டக் கூடியது.

இதனில் பின்னூட்டமிட்டவர் போலவே உயிரியல் ஆழமாக படித்திருக்க வாய்ப்புகிட்டாத எவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் இவைகளின் வாழ்க்கை முறை அறிந்து கொள்வதின் பொருட்டு. சரி, படிச்சவுடன் இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டு விடலாமே என்று தோணியதால் இந்தப் பதிவு.

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.

நான் பார்த்து அதிசயித்ததிலேயே பறவை இறகு (Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!

பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.

வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா, முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.

இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில். இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.

நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.


இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.

எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சியா எடுத்துக்கோங்கப்பா.

முட்டை (Egg): நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!

அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம். இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.

சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே. இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...

கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage): நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.

இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...

ப்யூப்பா நிலை(Pupa Stage): இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.

என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).

ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.

அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை: இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.

இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா. ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள், அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!

இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம். கடமையே கண்ணாயிரமா!

இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.

இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம். என்னே ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா!
Related Posts with Thumbnails