Wednesday, December 16, 2009

பரிணாமப் பின்னணியில் பறவைகளின் ஒலி : Birds Vocalization

நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் ஒலிகளின் அளவும், அதன் அழகு/கோர ஒலிக்குறிப்புகளும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி எவ்வாறாக அந்த நாள் நகர்கிறது என்பதனை தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது அல்லவா? அதற்குச் சான்றாக கிராமப் புறங்களில் அல்லது நிறைய மரங்களுடன் கூடிய வசிப்பிடங்களைப் பெற்றவர்கள் தன் படுக்கையிலிருந்து எழுவதற்கு முன்னமே பறவைகளின் ஒலிகளை கேட்டபடியே எழுந்திருப்பதில் உள்ள வித்தியாசத்தையும், பலத்த வாகன இரைச்சலுக்குமிடையே வாழும் ஒருவர் தன் நாளை தொடங்குவதற்குமானதாக வித்தியாசத்தையும் கொண்டு அறியலாம்.

இயற்கையின் பின்னணியில் முக்கியத்துவம் பெற்ற இந்த ஒலிகளை (calls and songs) எழுப்பும் பறவைகளின் உலகில் அந்த ஒலிகளுக்கான பொருள் அறிவது அவசியமாகப்படுகிறது. கண்டிப்பாக பறவைகளின் சங்கீதம் எது போன்ற சிந்தனைகள் நம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தாலும், அது ஒரு இனிமையான நாளைத்தானே தொடக்கமாக ஆரம்பித்து வைக்கிறது. அது போன்ற ஒலிகளை எழுப்பும் பறவைகளின் சங்கீதங்களுக்கு பின்னால் இருக்கும் பரிணாமச் சூத்திரம் கொஞ்சம் அறிந்து கொள்வோமா?

இயற்கையில் எல்லாவிதமான உயிரனங்களிலும் பால் சார்ந்து ஆண்/பெண் உடலமைவிலும், நிறத்திலும், குரலிலும் வித்தியாசம் அமைத்தே காட்டுகிறது. இதற்கு பறவைகளும் விதிவிலக்கல்ல! பறவை இனங்களில் ஆண் பறவைகளை பெண் பறவைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்ல வண்ணங்களுடனும், சற்றே உடல் பருமனுடனும் ஆண் பறவைகள் இருப்பதனைக் காணப்பெறலாம்.

இவ்வாறான இயற்கை அமைவை பரிணாமப் பார்வை கொண்டு பார்த்தால் அது பால் தேர்ந்தெடுப்பு (sexual selection) காரணங்களுக்காக அமைந்ததாகப்படுகிறது. இயற்கையின் பொருட்டு இந்த மானுடம் மட்டுமே சற்றே விலகிய பாதையைத் தேர்ந்தெடுத்து இது போன்ற காரணிகளை புறந்தள்ளி தாமாக அமைத்துக் கொண்ட சுயநல போக்குப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு சில விசயங்களில் அந்த விலங்கினங்களின் உலகத்தில் நாமும் ஒரு பகுதிதான் என்று நிரூபிக்காமல் இல்லை.

விலங்கு உலகில் வலிமையுள்ளதே தப்பிப்பிழைக்குமென நியதி (survival of fittest) ஒன்று உண்டு. அந்த நிலையில் தன் இனத்தை அவை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல சரியான வாரிசுகளை தேர்ந்தெடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவ்வாறான அமைப்பில் இனப்பெருக்கத்தின் பொருட்டு பெண் சரியான, வலிமையுள்ள, குரல் வளமிக்க, அழகுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அதன் பொருட்டு ஆண் உயிரினங்களும் கடுமையாகப் போராடி தன்னுடைய சக இனத்திற்குள்ளேயே இருக்கும் மற்ற ஆண்களுடன் போட்டியிட்டு தன்னை நிலை நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்கிறது.

இந்தப் பின்னணியில்தான் ஏன் ஆண் பறவைகள் அவ்வளவு வண்ணங்களுடனும், நல்ல குரல்வளத்துடனும் இயற்கையில் அமைந்து பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். அவ்வாறானமைவில் ஆண் பறவைகள் எழுப்பும் தனிப்பட்ட ஒலி எங்கோ அமர்ந்திருக்கும் தன் இன ஆண் எதிராளிக்கு ஒரு அபாய முன் எச்சரிக்கையாகவும், பெண் பறவையை கவர்வதற்கான பிரத்தியோக ஒலியாகவும் கூட அமையலாம்.

இந்த ஒலிகள் பல விதங்களில் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான ஒலிக் குறிப்புகளுடன் அமைந்திருக்கிறது. வானம்பாடி(Skylark) என்ற பறவைகளினத்தில் கிட்டத்தட்ட 300 வித்தியாசமான ஒலிக்குறிப்புகளுடன் அவைகள் சத்தம் எழுப்புவதாக அறியப்படுகிறது. சிவப்புக் - கண்ணுடைய விரியோ (Red-Eyed Vireo) என்ற வகைப் பறவை ஒரு நாள் ஒன்றிற்கு சராசரியாக 20,000 முறை பாடுகிறதாம். இதன் மூலமாக பெண் பறவைகளுக்கு ஆண் பறவை இருக்கும் இடத்தில் உள்ள உணவின் தாராளத்தன்மையையும் அறியப்படுத்துகிறதாம். தொடர்ந்து இது போன்ற ஒலியை எழுப்பும் ஆண் இறுதியாக பெண் பறவையை கவரும் வாய்ப்பையும் அதிகம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஒலிகள் சில நேரத்தில் மிகவும் சிக்கலான குறிப்புகளையும், எளிமையான ஒலிக்குறிப்புகளையும் கொண்டதாகவும் இருக்கிறது.

அது போன்றே மரங் கொத்திகளும் (Woodpeckers) நன்றாக காய்ந்து வெற்றிடமாக உள்ள மரக்கிளைகளை கண்டறிந்து ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தி ஒலியெழுப்புகிறது என்பதும் இதில் அடங்கும். அவைகள் சமயத்தில் ஒரு நொடிக்கு 15 முறை கூட கொத்தி தன் எல்லையை (territory) பிற ஆண் பறவைகளுக்கு அறிவிப்பதாகவும், தன் ஜோடியை நாடி வரச் செய்யும் புணர்ச்சிக்கான அறிவிப்பாகவும் (courtship display) செய்து கொள்கிறது.

வானம்பாடி ஆண் பறவைகள் ஒலியின் நீட்டிப்பை குறுக்கியும், தடித்தும் எழுப்புவதின் மூலம் அது தனது இன மற்ற ஆண் பறவைகளை தன்னுடைய எல்லைக்கு அப்பால் ஒதுங்கிச் சென்றுவிடுமாறு எழுப்பும் அபாய ஒலியாக அமைத்துக் கொள்கிறது. அதே நேரத்தில் தன் அருகாமையே அவை அவைகளுக்கென உள்ள எல்லைக்குள் வசிக்கும் பிற ஆண் பறவைகளுக்குள் வட்டார வழக்கு(dialect) ஒலிகளும் இருப்பதாக அறியப்படுகிறது. புதிதாக தன் எல்லைக்கு அப்பாற்பாட்ட மற்றொரு இடத்திலிருந்து தவறுதலாக அந்த வட்டாரத்திற்குள் ஏதேனும் அதே இன ஆண் பறவைகள் வந்திருக்குமாயின் இதுபோன்ற சிறப்பு ஒலியமைவுகளை கிளப்பி அவைகளை பிரித்தறிய பயன்படுத்துவதாகவும் தெரியவருகிறது. இது போன்ற குழு அமைப்பு அவைகளுக்குத் தேவையான பாதுகாப்பைத் தருவதாக பரிணாமத்தின் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.

இத்தனை ஆர்பாட்டங்களும் எதன் பொருட்டு அமைகிறது என்றால், பெண் பறவைகள் ஒரு ஆண் பறவையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக அந்த ஆண் எத்தனை பெரிய எல்லையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது, எது போன்ற ஒலிக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, வண்ணத்தின் அடர்வு அதனை வெளிக்கொணரும் தன்மை, அதன் உடல் வலிமை மற்றும் பருமன் இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இனப் பெருக்கத்திற்கான அடுத்த நகர்வான புணர்ச்சிக்கு பெண் பறவைகள் வழிவிடுகிறது.

இயற்கையின் எதார்த்த உலகிலிருந்து இது போன்ற சிறிய விசயங்களை கவனிப்பதின் பொருட்டு நாம் புரிந்து கொள்வதற்கும், விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் நிறைய உள்ளது. மாறாக, சற்று நின்று நிதானித்து கவனித்தால் நவீன தேவைகளுக்கென மனிதர்களாகிய நாம் இயற்கையின் ஆரோக்கிய அமைவிலிருந்து விட்டு விலகி வெகு தொலைவு சென்று கொண்டிருக்கிறோம் என்பது விளங்கும்.


பி.கு: ஈழநேசனுக்காக எழுதியது! நன்றி!

Friday, August 28, 2009

காட்டுத்தீ ஏற்படுவது நல்லதா? கெட்டதா?:Forest Fire

அண்மைய காலங்களில் உலகம் தழுவிய முறையில் காடுகளில் அதி ஆக்ரோஷமான முறையில் காட்டுத்தீ ஏற்படுவது என்பது நடைமுறையாக உள்ளது. அப்படியெனில், முன்னைய காலங்களில் இது போன்ற காட்டுத்தீக்கள் இல்லையா என்று கேட்டால், கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஆனால் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் ஏன் இப்பொழுது மட்டும் ஒவ்வொரு முறையும் காட்டுத்தீ மிகப்பெரிய அளவில் பரந்துபட்ட வெளிகளைச் சாம்பலாக்கிச் செல்வதும் பலத்த பொருளாதார இழப்புகளையும் சில சமயங்களில் மனித உயிர்களைக் காவுகொண்டும் அழிவை ஏற்படுத்துகிறது?

இதற்குரிய காரணங்களில் முதன்மையானதாக நிற்பது உலகச் சூடேற்றம். அதனையடுத்து நீண்டு போன வறண்ட கோடைக்காலம். இவைகளன்றி வட அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான காட்டுத்தீ கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும், தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காரணமாகின்றன. இவை அந்த நேரத்தில் பெருமளவில் காட்டுத்தீயை நன்றாகவே கட்டுக்குள் வைக்க உதவின. ஆனால் இன்று அவையே கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை உருவாக்குவதற்கு உதவுவதாகவும் அமைகின்றன.

இன்று பெருகிவரும் மக்கட் தொகையும் அவர்களுக்கான தேவையும் பல்கிப் பெருகிப் போக, வனப் பகுதிகளுக்குள்ளும் மனித வாழ்விடங்கள் பன்முகமாக காலுன்றியதும் ஒரு வகையில் காட்டுத்தீ ஏற்படும் பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாக உள்ளது.

பொதுவாக காட்டுத்தீ, காடுகளில் ஏற்படுவது இயற்கையின் சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. அது போன்ற தீக்கள் இயற்கையில் மின்னலின் மூலமாகவும், பாறைகள் எப்பொழுதாவது உருள்வதால் ஏற்படும் உரசலால் உருவாக்கப்படும் தீப்பொறிகள் மூலம் ஏற்படுவதுண்டு. அவ்வாறு காட்டுத்தீக்கள் ஏற்படுவதினால் பல நன்மைகளும், சில தீமைகளும் இயல்பாகவே பக்க விளைவுகளாக விட்டுச் செல்லப்படுகின்றன. சில மரங்கள் இத்தீக்களைத் தாண்டியும் நிற்கும் திறனுடையதாக தகவமைவுகளை இயல்பாகவே பெற்றிருக்கின்றன.

சில நேரங்களில் இத் தாவரங்களின் இனப் பரவலுக்கும் இத் தீக்கள் உதவலாம். தீக்கு முன்பு வரை அங்கு வாழும் தாவரங்களில் சிலவற்றுக்கு வெளிச்சமே கிடைக்காமல் வெளிக்கிளம்ப முடியாதவைகளாக இருந்திருக்கக் கூடும். இப்பொழுது கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி பன்முக வழியில் தாவரங்கள் மீண்டும் செழித்து வளர ஒரு வாய்ப்பை வழங்குவதாகவும், தேவையில்லாத அடர்ந்த ஊடு தாவரங்களை விலக்கி அதனை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவும் காட்டுத்தீ ஒரு காரணியாக அமையலாம்.

அதற்கு நேர்மாறாக தீமைகள் என்று பார்த்தோமானால், அதீதமான கட்டுக்கடங்காத தீ பெரும் பரப்பினையும் அதனூடாக வாழும் சிறு ஜீவராசிகளையும் அழித்துவிடுகிறது. மேலும் அடிக்கடி இது போன்ற தீ ஏற்படுமாயின் சிறு தாவரங்களின் வளர்ச்சிநிலை குறுக்கப்படுகிறது. நம் பங்கிற்கு மனிதருடைய இழப்பாக வீடுகள் அதனையொட்டிய வியாபாரத் தளங்கள், மர வியாபார நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய கால கட்டத்தில் மனிதனின் பங்கு இந்தக் காட்டுத்தீ உருவாக்கத்தில் அதிகமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதி நவீன தீயணைப்பு வசதியும் (மேற்கத்தியநாடுகளில்), அடர்த்தியான ஊடு தாவரங்களுடன் இருக்கும் வனங்களே அழகான, உற்பத்தித் திறன் மிக்க வனங்களாக அமையும் என்ற அணுகுமுறை ஆரம்ப கால கட்டத்தில் நிலவியது. நினைத்தபடியே அமைந்தாலும் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு பெரும் கட்டுக்கடங்காத காட்டுத்தீக்களை அந்த அணுகுமுறை தருவிப்பதாக அமைந்தது.

எப்படியெனில், இயற்கையின் அமைவில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கும் ஒருமுறை இயற்கையாக ஏற்படும் காட்டுத்தீக்களால் தேவையற்ற ஊடு தாவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இதனால் அவை எட்டி வளர்ந்து பெரும் மரங்களின் நுனிக் கிளைகளைத் தொட முடியாத நிலைமை இருந்ததால் பெரும் மரங்கள் இத்தீக்களுக்கு இரையாகாமல் தப்பும் வாய்ப்புக்கள் இருந்திருக்கின்றன.

ஆனால் பின்னர் கொண்டுவரப்பட்ட புதுவிதமான அணுகுமுறை மூலம் நன்றாக தீயை எளிதில் கவர்ந்து கொள்ளும் வகையில் அடர்த்தியான ஊடு தாவரங்களும், குறிப்பிட்ட மர வகைகளை வெட்டி அதன் தண்டுப் பகுதியை எடுத்துக் கொண்டு மிச்சம் உள்ள பகுதிகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதும் பெருமளவில் தீயின் உக்கிரத்தை அதீதப் படுத்துகிறது.

இன்னொரு காரணம் நம்முடைய கவனக்குறைவால் ஏற்படும் தீ. வனப்பகுதியில் பயணிக்கும்
பொழுது எனக்கென்ன என்று தூக்கியெறியும் சிகரெட் துண்டங்கள், சுற்றுலாவுக்கோ வேறு தேவைக்கெனவோ அமைக்கப்படும் முகாம்களில் ஏற்படுத்தப்படும் தீயிலிருந்து ஏற்படும் காட்டுத்தீ, அதற்கெல்லாம் மேலாக வேண்டுமென்றே வைக்கப்படும் தீ, வனத்தினூடாகச் செல்லும் தனிவான மின்சாரக் கம்பிகளிலிருந்து உருவாக்கப்படும் தீ என்று பலவிதங்களில் எமது கவனக்குறைவால் காட்டுத்தீக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காட்டுத்தீயை கட்டுக்குள் வைப்பதனைக் கருத்திற்கொண்டு 'குறிப்பிட்ட மர அகற்றல் (selective tree felling)' என்ற புதுவிதமான நுட்பத்தை அணுகுகிறார்கள். இதன் மூலமாக பெரும் மரங்களுக்குத் தீ பரவும் தன்மையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுண்டு.

இந்தியா, இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் அமையும் மழைக்காடுகளில் ஏற்படும் தீ, இயற்கையாக ஏற்படுவனவாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே அதிகமாக உள்ளன. சில நன்மைகள் மேற்கூறிய முறைகளில் கிடைத்தாலும், ஒவ்வொரு முறை இது போன்ற தீக்கள் ஏற்படும் பொழுதும் வெளிவிடப்படும் அதிகூடிய வெப்பம் (சில சமயம் 1000 இலிருந்து 2000 பாகை·பாரன்ஹீட்) தாவர வகைகளின் விதைகளைக்கூட அழித்து விடுகிறது. தீக்குபிறகு அங்கு வாழும் பன்முகப் பறவை மற்றும் சிறு விலங்குகளின் இன வகைகளில் மாற்றங்கள் பெரிதாக நடைபெறா விட்டாலும், உணவாகக் கிடைக்கும் தாவர, விலங்கு வகைகளைக் கொண்டு அதன் கூட்டமைவில் சில மாற்றங்கள் அமையக் கூடும்.

குளிர்ச்சியான தட்ப வெப்பம் கொண்ட நாடுகளில் உள்ள காடுகளைப் போலன்றி, வெப்ப மழைக்காடுகள் அதிக ஜீவராசிகளை - மர உச்சியிலிருந்து அழுகி வரும் இலை தழைகளுக்கிடையேயுமாக எங்கும் எப்பொழுதும் கொண்டிருக்கின்றன. அதனைப் போன்றே தாவர இனங்களும் செழித்து இருப்பதால் மழைக்காடுகளில் இது போன்ற தீயும் பெரும் சேதத்தினை உருவாக்கி விடுகிறது, அதுவும் இயற்கையாகவே நிகழும் நிலையிலே கூட. இத் தருணத்தில் மனிதனின் தவறுகளால் நிகழும் காட்டுத்தீக்களும் சேர்ந்து கொண்டால் நம் கற்பனைக்கும் எட்டாத விளைவுகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும்.

இச் சூழலில் நம் பொறுப்புணர்ந்து நம்மால் காட்டுத்தீக்கள் உருவாக்கப்படாமல் தவிர்ப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது.



Tuesday, August 18, 2009

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு

இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?

அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.

தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!

இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.

அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.

ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.

இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.

பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.

ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.

இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!



Thursday, July 30, 2009

மனித பரிணாம இணைப்பு "ஈடா" : Fossil - Ida?!

கடந்த மே மாதம் ஜெர்மனியில இருந்து டாக்டர் John Hurum_ங்கிற குரங்குகளராய்ச்சி விஞ்ஞானி கையில சுமார் 47 மில்லியன் வருஷத்திற்கு முன்ன வாழ்ந்த ஃபாசில் ஒண்ணு பம்பர் பரிசாட்டமா கிடைச்சிருக்கு. அது ஃப்ராங்ஃபோர்ட்ல இருந்து ஒரு 30கிமீ தள்ளித்தானாம்.

அது வால்/வாலற்ற குரங்கு மற்றும் மனித பரிணாம வளர்ச்சிப் பாதையை "இணைக்கும் பாலமா (missing link)" கருதப்படக் கூடியளவிற்கு அதி முக்கியமான ஒன்னுன்னு ஒட்டு மொத்த பரிணாம ஆராய்ச்சியாளர்கள் மத்தியில கருதப்படுகிறதாம். கண்டுபிடிச்ச அந்த விஞ்ஞானி அந்த ஃபாசிலோட நீளம், பருமன் எல்லாம் பார்த்தவுடன் தன்னோட பெண் ஈடா(Ida)வை நினைவுக்கு கொண்டு வந்ததால் அந்தப் பேரையே அந்த ஃபாசிலுக்கு வைச்சிட்டாராம்.

இதை செய்தித் தாளில் படிச்சவுடன் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி, எப்படி ஜெர்மனியில போயி இந்த அரிய ப்ரைமேட் (Primate) வகை ஃபாசில் கிடைச்சிருக்க முடியும் அப்படிங்கிறதுதான். ஏன்னா, மனித பரிணாம வளர்ச்சி அனைத்துமே ஆஃப்ரிகா கண்டத்திலல்லவா நடந்துச்சு; கிடைச்ச சாதகமான தட்ப வெப்ப சீதோஷ்ண நிலைகளும், ஏனைய இயற்கை சார்ந்த அமைவுகளும் அதற்கான காரணிகளை வழங்கினதுனாலே! அப்படி இருக்கும் பொழுது எப்படி இந்த குரங்கு வகை ஈடா அங்கு கிடைத்திருக்கக் கூடுமென கேள்வி கேட்டுக் கொண்டிருந்தேன்.

ஆனால், 47 மில்லியன் வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போன்ற மத்திய ஐரோப்பா நாடுகளில் இன்றைய ஆசிய, ஆஃப்ரிகா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் காணப்படும் மழைக் காடுகளும், சீதோஷ்ண நிலைகளைப் போன்றே பூமிப் பந்தின் கால கட்டங்களாக அறியப்படும் பேலியோசீன் (Paleocene - 65~58 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்தில் அப்படியாக இருந்ததாக விஞ்ஞானிகள் கண்டறிந்து முன் வைத்திருப்பது அறிய வந்ததும், அட! அப்போ நாமதான் பின் தங்கி இருந்திருக்கிறோம் இந்த விபரங்களை அறியாமல்னு ஈடா பற்றிய சந்தேகம் தீர்ந்து இப்போ பரிணாம ஏணியில் ஏன் இந்த ஈடா ஃபாசில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு பேசிக்கிறாங்கன்னு அறிஞ்சுக்க ஆர்வம் பீரிட்டு கிளம்பினுச்சா அத கொஞ்சம் புரிஞ்சிக்கிட்டவுடன் உங்ககிட்டயும் பகிர்ந்துகளாமேன்னு இங்கே வந்திருக்கேன்.

பார்த்திங்கன்னா டைனோசார் அழிவுக்கு முந்திய கால கட்டம் வரைக்கும் பரிணாமத்தில எந்த ஒரு பாலூட்டியும் பெரிய அளவில சொல்லிக்கிற மாதிரி கிடுகிடுன்னு தன்னோட வித விதமான பல்முக இனங்களாக கொழிக்க முடியாம இருந்துச்சு. ஆனா, டைனோசார்களின் அழிவை ஒட்டியும் சுமார் 65 மில்லியன் வருஷங்களுக்கு முன்னயுமே நம்மூர் மர மூஞ்சுரு (tree shrew)களையொட்டிய வகை பாலூட்டிதான் முதல் கொளுந்து இந்த வரிசையில. அது பூமி கோளத்தின் பேலியோசீன் காலம். அதாவது அப்பொழுதுதான் வாலில்லா மற்றும் வால் உள்ள குரங்குகள் பல்கிப் பெருகுவதற்கான காலத்தையொட்டிய யியொசீன் (Eocene - 58~40 மில்லியன் வருஷங்களுக்கு முன்பு) காலத்திற்கு முந்திய கால கட்டம்.

அந்த பேலியோசீன் காலத்தில் தோன்றியவைகள் தான் இந்த லெமூர், தேவாங்கு மற்றும் டார்சியர்ஸ், இவைகள் ப்ரோசிமியன்ஸ் (Prosimians) என்றழைக்கப்படும். அதற்கு பிந்திய கால கட்டமான யியொசீன் காலக் கட்டத்தில் தேன்றியவைகளை ஆந்ரோபாய்ட்ஸ் (Anthropoids) என்றழைப்பார்கள் இதில் தான் குரங்கு வகைகள், வாலில்லா மனித குரங்குகள் மற்றும் மனிதன் பரிணமித்த காலம்.

இது வரைக்கும் குழம்பாம வந்திருப்பீங்கன்னு நம்புறேன். சரி, இப்ப கண்டெடுக்கப்பட்ட இந்த ஈடா ஃபாசில் இந்த இரு கால கட்டங்களிலும் தோன்றிய இரு குழுக்களையும் (ப்ரோசிமியன்ஸ் மற்றும் அந்த்ரோபாய்ட்ஸ்) இணைக்கும் குணாதிசியங்களுடன் அப்படியே அலேக்கா லட்டு மாதிரி எந்த பகுதியும் சிந்தி சிதைஞ்சிடாம முழுசா கிடைச்சி இந்தப் பரிணாம பண்புகளை ஊர்ஜிதப் படுத்துற மாதிரி அமைந்ததுனாலேதான் இப்படி அனல் கக்க வைக்கும் சூடான செய்தியா அந்த குட்டிப் பெண் ஈடா அமைந்துவிட்டது.

பெரும்பாலும் ஃபாசில்கள் கண்டெடுக்கப்படும் பொழுது முழுதுமாக கிடைப்பது அரிதிலும் அரிது. பல் ஒரு இடத்தில் கிடைத்தால் அந்த விலங்கின் வால் எலும்போ அல்லது தாடை எலும்போ எங்காவது இன்னொரு இடத்தில் கிடைக்கக் கூடும். ஆனால் ஈடா விசயத்தில் முழுதும் கிடைத்ததோட மட்டுமில்லாமல் அந்தப் பெண் கடைசியாக உண்ட பழ, தாவர கொட்டை மற்றும் இலைகளின் மிச்சங்களும், உடல் ரோமங்களும், திசுக்களும் கூட கிடைத்திருந்ததும் மற்றுமொரு சிறப்பு.

இப்பொழுது எப்படி இரண்டு குழுக்களின் குணாதிசியங்களைப் பெற்றிருக்கிறதுன்னும் சொல்லிடுறேன். தேவாங்கு, லெமூர் வகை விலங்குகளிலிருக்கிற மாதிரி எலும்புக் கூடமைவும், சொரிந்து கொள்வதற்கு இணையான ஒரே ஓர் கால்விரலைப் போன்று தனியாக அமைந்த புலி நகத்தையொட்டிய நகமும், கீழ்தாடையிலமைந்த ஒரு பல்லும் ப்ரோசிமியன்ஸ் வகை விலங்குகளோட போறேன்னு சொல்லுவதாகவும்; குரங்கு, வால்/வாலில்லா ஆட்களூடன் இணைவதற்கான மற்ற பண்புகளான - பொருட்களை விரல்களால் சுத்திப் பிடிக்கும் தன்மையோடும், எதிர் முனையில் அமைந்த கட்டைவிரலும், புலி நகங்களைப் போன்று கூரான நகங்களை கொள்ளலாமல் விரலுக்கு விரல் நம்மையொத்த நகங்களையும் கொண்டு நான் அந்ரோபாய்ட்ஸ் என்று சொல்லிக்கிறதாகவும் இந்த ஈடாப் பெண் இருக்கிறதுனாலேதான் இத ஒரு "இணைப்பு பாலம்"ங்கிற அளவில முக்கியமான ஃபாசிலா கருதப்படுகிறது.

இன்னும் என்னால ஜெர்மனி ஒரு காலத்தில ட்ராபிகல் நாடா இருந்திருக்_கப்போய்னு நினைக்கும் பொழுது, நம் நாடெல்லாம் வரும் காலத்தில ஒரு பாலைவனமே ஆனாலும் அடன்னு ஆச்சர்யப்படுறதுக்கில்லைன்னு தோணுது.

Sunday, April 19, 2009

பறவை பார்த்தல்: Birding as a Hobby!

எனக்கு நல்லா நினைவிருக்கு 1990கள் வரைக்கும் என்னய சுத்தி ஒரு பத்தில இருந்து பதினைஞ்சு வகையான பறவைகள் இருக்கலாங்கிற வரையான ஒரு பொது அறிவு இருந்ததாக. ஆனா, மயிலாடுதுறையில ஏ.வி.சி கல்லூரியில வனவியல் முதுகலைப் பட்டப் படிப்புக்கு சேர்ந்ததற்கு பிறகுதான், பறவைகளைப் பத்தி படிக்கிறதுகின்னே ஒரு துறை இருப்பதாகவும் அதுக்கு பறவையியல்னும் (Ornithology) தெரிய வந்துச்சு.

அந்த சமயத்திலதான் எனக்கு பைனாகுலர் (Binoculars=தமிழ் படுத்துங்கப்பா; இருகுழல்நோக்கி?), பறவைகளை அடையாளம் காண்பதற்கென உள்ள தள கையேட்டுப் புத்தகங்கள்(field guide) எல்லாம் கண்ணில தட்டுப்பட ஆரம்பிச்சுச்சு. அந்த வகுப்புகளின் ஒரு பகுதியாக சில சமயங்களில் அருகாமையே உள்ள வயல், கன்மாய்கள், தடாகங்கள், ஊருணிகள், வயல்வெளிகள்னு அந்தக் கல்லூரியை சுத்தி அமைந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று பறவைகள் பார்க்கும் சந்தர்ப்பமும்கிட்டியது. அதுவே கொஞ்ச கொஞ்சமா பழக்கமாகி, பின்னாடி பார்த்தீங்கன்னா நூலகத்திலருந்து பைனாகுலரும், கையேட்டுப் புத்தகமும் கடன்வாங்கி சொந்த ஊருக்குப் போகும் பொழுது கூட அங்குள்ள வயல் வெளிகளில் பறவைகள் தேடி நடக்கிற அளவிற்கு ஆர்வம் வந்துருச்சு.

அது மாதிரியான ஒரு ஆர்வமூட்டக் கூடிய வேலை இந்த பறவைங்க கவனிக்கிறதுன்னா மிகையாகாது. ஏன்னா, இந்தியாவில மட்டுமே 1250 வகையான பறவைகள் காணப்படுவதாகவும் அவைகளில் ஏறத்தாழ 920 வகையான பறவைகள் இங்கயே முட்டையிட்டு, இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து வருவதாகவும் அறியப்படுகிறது. நம்மூர்ல அதாவது தென் இந்தியாவில் (இலங்கை) 450 வகையான பறவைகளும், அவைகளில் மேற்கு மலைத் தொடர்களில் மட்டுமே காணப்படும் (endemic species) 35 வகையான அரிய பறவைகளும் இது வரையிலும் கண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.

பல முறை எனக்கு நேர்ந்தது எப்படின்னா குளக்கரைக்குப் போவேன், ஏதாவது ஒன்றிரண்டு சிறு பறவவைகள் வேலிகளில் தாவித் திரிவதை கண்டு அவைகளை தள கையேட்டில் உள்ள பறவைகளுடன் ஒப்பிட்டு அடையாளம் கண்டுவிட்டால் பெரு மகிழ்ச்சியோடு அன்றைய தினத்தில் மிதப்பேன். அப்படியாகத்தான் ஒரு நாள் அந்த நடையில் ஒரு பெரிய புது பறவை ஒன்றைக் காண நேர்ந்தது. என்னுடைய 21வது வயது வரைக்கும் இத்தனை பெரிய பறவை, இவ்வளவு எடுப்பான நிறத்துடன் என் கண்களில் சிக்காமல் நான் வாழ்ந்து வந்த ஊரிலேயே வாழ்ந்து வந்தது எப்படி எனக்குத் தெரியாமல் போனது என்று அதிசயமாக இன்று நினைக்கிறேன். ஆமாம். என்னாகிவிட்டது அந்த நடையின் பொழுது ஒரு காகத்தின் அளவிலிருந்த ஒரு பறவை வேலிகளுக்குள் ஒளிந்து மறைந்து தாவித் தாவி சென்றதை கவனித்து விட்டேன்.

நன்றாகப் பார்க்கும் பொழுது அது காகத்தினை விடப் பெரிதாக இருந்தது. மேலும், காகம் அப்படி கள்ளி வேலிகளில் புகுந்து சென்று கொண்டிருப்பதனை அந்த பறவைகள் கவனிப்பு நிலையில் நான் கண்டறிந்ததில்லை. இந் நிலையில், அப் பறவையின் பழக்கம் என்னை மேலும் ஆர்வமூட்டியது. கையில் பைனாகுலரைத் தவிர வேறு எதுவுமே இல்லை. கடைசியாக அந்தப் பறவை ஒரு முடிவிற்கு வந்ததாய் வெளிக் கிளம்பி சிறகெடுத்துப் பறந்து ஒரு 300 மீட்டரை கடந்து மீண்டும் அதே போன்றதொரு வேலிக்குள் புகுந்து கொண்டது.

ஆஹா! நான் ஏதோ ஒரு புது விதமான பறவையை கண்டுபிடித்து விட்டதாகவும், அது பெரிய அளவில் பேசப்பட்டு கையேட்டுப் புத்தங்களில் எனது பேருடன் வரப் போகிறதென்றும் மிக்க ஆவல் கொண்டவனாய் அடுத்த மணி நேரங்கள் அந்தப் பறவையின் பின்னாலே மிதந்துகிட்டே ஓடிக்கிட்டுருந்தது.

ஆனால் அந்தப் பறவையின் பறப்பு எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. அது, அதன் மேல் இறக்கைப் பகுதியில் செங்கல் நிறந்திலமைந்த திட்டான இறகுகளின் இருப்பை உறுதிப் படுத்தியது. இப்படியாக அந்தப் பறவையை பின் தொடர்ந்து, தொடர்ந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர்கள் போயிருப்பேன். நேரம் ஓடியதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து காலை உணவுக்கு அமரும் பொழுது நேரம் முன் மதியத்தைத் தொட்டிருந்தது. இப்படியாக நிறைய நாட்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடந்ததுண்டு. பின்பு அந்தப் பறவை பற்றிய குறிப்புகளுடன் கையேட்டை வைத்து அறியும் பொழுது அது Crow Phesant (செண்பகப் பறவை ~ செம்போத்து) என்பதாக தெரிய வந்தது. மேலும், கொஞ்சம் கவனத்துடன் ஆராய்ந்தால் அடிக்கடி காணக்கிடைப்பதென்றும் அறிந்தேன். என் ஆசையில் மண்!

பறவைகள் கவனிப்பினை ஆரம்பித்து ஆர்வம் கிளம்பிவிட்ட தருணத்தில், தினமும் புதிது புதிதாக பறவைகளைக் கண்டு நம்முடைய பட்டியலில் சேர்ப்பதில் ஒரு விதமான கிறக்கம் இருக்கும். அதுவே எனக்கும் நடந்தது. அது வீங்கி நீல்கிரீஸ்ல் வைத்து மேற்கு மலைத்தொடரில் காணக்கிடைக்காதென எண்ணியிருந்த ஒரு "ஸ்ரைக்" வகைப் பறவையை மீள் கண்டெடுக்கும் வரைக்கும் சென்றது.

ஒவ்வொரு வகையான பறவையும் எந்த விதமான சூழ்நிலையில் நான் கண்ணுற்றேன் என்று கூற வேண்டுமானால், அது மாதிரியான ஒவ்வொரு சிறப்பு பறவைக்கும் தனிப் பதிவாகவே பதிவிடலாம். அது போன்ற சுவாரசியமான நிகழ்வாக சில பறவைகள் எனக்கு வாய்ப்பை கொடுத்திருந்தது. அதுவும், மழைக்காடுகளில் பெரிய சேலஞ்ச்சாகவே அமையும் அவைகளின் சத்தத்தினை வைத்து திசையறிந்து, அமர்ந்திருக்கும் மரக் கிளையறிந்து அப்படியே நல்ல பார்வைக்கும் எட்டி... ம்ம்.

ஆரம்பக் காலங்களில் பைனாகுலர் பயன்படுத்துவதே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். பயன்படுத்தியவர்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று விளங்கும். வெறும் கண்களால் ஒரு சிறு பறவையை கண்டுவிட்டு அந்த திசையை நோக்கி பைனாகுலர் கொண்டு பார்க்கிறேன் என்று வைத்துப் பார்த்தால் வேறு எங்காவது குளித்துக் கொண்டிருப்பவர்கள் தெரிவார்கள் [:-P]. சரியான இலக்கை நோக்கிப் பிடிக்க சில நாட்கள் அல்லது மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் அந்தப் பழக்கத்தை நம்மதாக கொள்ள.

பறவைகள் கவனிப்புக்கு தேவையானது என்னன்னு பார்ப்போம். குறைந்த பட்சம் 8 X 32 or 8 X 42 அளவீடு கொண்ட பைனாகுலர். ஒரு நோட்டுப் புத்தகம், பென்சில், ஒரு நல்ல தள பறவைகள் கையேடு எல்லாத்துக்கும் மேலா ஆர்வம் இன்னும் பெரிய அளவில ஆர்வம். அவ்வளவே!

அடுத்து எப்படி ஒரு பறவையை கவனிக்க நேரும் பொழுது என்னன்னா விசயத்தை கவனிக்கணுங்கிறதை சொல்லிடுறேன். முதலில் நல்ல கண்பார்வை. அதாவது அட்டெண்டிவ்வாக பார்க்கும் மன நிலை. பொதுவாக பறவைகள் இலைகளுக்குள் அமர்ந்திருக்கும் பட்சத்தில் எப்பொழுது அவை அசைகிறதோ அதனைக் கொண்டு பறவையின் இருப்பை அறிய முடியுமல்லவா? எனவே, பொறுமையாக கூர்ந்து பார்க்கும் ஒரு ஆர்வம் வேண்டும். அப்படி இருக்குமிடம் அறிந்து கொண்டால் ஆர்வத்தில் அடுத்தவரை அழைக்கிறேன் என்று கூச்சல் இடுவது ஒரு கல்லை எடுத்து எறிவதற்கு ஒப்பானது என்பதால், அதனை கண்டிப்பாக தவிர்த்து, ஹஸ் குரலில் விசயத்தை பெரிய அளவு உடம்பு அசைவுகளற்ற முறையில் வெளிப்படுத்துவது அவசியம். எல்லாம் அனுபவம் கற்றுக் கொடுப்பதுதான்.

ஒவ்வொரு குடும்ப பறவைக்கும் ஒரு குறிப்பிட்ட விதமான பழக்க வழக்கமிருக்கும் அல்லது அதனோட உடல் புற உறுப்புகளே கூட அதன் வாழ்வு முறைக்கு தகுந்த மாதிரி அமைஞ்சிருக்கும். உதாரணமா பார்த்தோம்னா: கிளைகள் மாதிரியான ஏதோ பிடிமானத்திற்கு ஏற்ற விசயங்களை பற்றிக்கிட்டு அமர்கிற பறவைகள் (perching bird =மைனா, ஸ்ரைக், புல்புல், சாம்பல் நிறக் குருவி, கருங்குருவி...). இந்த வகைள்தான் பறவைகள் இனத்திலயே அதிகமான எண்ணிக்கையில் காணப்படுகிறது. நீர் நிலைகளுக்கு அருகாமையில் காணக்கூடிய பறவைகளுக்கு பொதுவாக கால்கள் நீளமாவோ, அல்லது அலகுகள் வளைந்தோ, நல்ல தட்டையாகவோ, அலகுக்கு கீழ் பையுடனோ காணப்படலாம். இப்படியாக அவைகளை பிரிச்சறியலாம்.

இது போன்ற பொதுவான பண்புகளைக் கொண்டு ஓரளவிற்கு அது எந்த விதமான பறவையாக இருக்கக் கூடும் என்று அனுமானிக்கும் அனுபவத்தை பெற்றுவிடுவோம். இரண்டாவது, நமக்கு மிகவும் பார்த்து பழக்கப் பட்ட ஒரு பொதுவான பறவை உடலைப்பு, அதன் நீளம், எடை இவைகளை கருத்தில் கொண்டு அந்தப் பறவையுடன் பார்த்த பறவையை குறிப்பிட்டு குறித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, நம்ம சிட்டுக் குருவி எல்லாருக்கும் பார்க்கக் கிடைத்திருக்கும் ஒரு பறவை, அதே போன்றே உடல் பருமனுடன் வயல் வெளியில் பிப்பிட், ஸ்கைலார்க் வகை பறவையை காண நேரிட்டிருந்தால், குறிப்பு புத்தகத்தில் சிட்டுக் குருவி அளவு, பிறகு எது போன்ற அடையாளங்கள் மிகவும் கவனிக்கத் தக்க வகையில் தென் பட்டதோ, அவைகளை எல்லாம் நன்றாக கவனித்து குறித்துக் கொள்ள வேண்டும்.

இறக்கையின் நிறம், கண்களைச் சுற்றி ஏதாவது வட்டம், நிறம் இருந்ததா, அதன் அலகின் அமைப்பு, நெஞ்சுப் பகுதியின் நிறம், வால் அமைப்பு, அங்கு ஏதாவது வரியாகவோ அல்லது பட்டைகள் ஏதும் காணப்பெற்றதா, பறக்கும் பொழுது கீழ் இறகுகளின் நிறம் குறிப்பிடும் படியாக எதாவது என்று நன்றாக கவனித்து கிறுக்கி வைச்சுக்கோங்க. முடிஞ்சா படமாவே வரைஞ்சு கூட வைச்சுக்கலாம். எங்கே எந்த நேரத்திற்கு பார்த்தீங்க, பறக்கும் பொழுது எப்படி பறந்துச்சு. நேர் கோட்டில் போன்றமைவிலா அல்லது மேலும் கீழுமாக இறங்கியா போன்ற குறிப்புகளும் உதவலாம் கையேட்டில் அந்த பறவையை பின்பு அடையாளப்படுத்த எத்தனை விதமான குறிப்புகள் இருந்தாலும் அது மேற்கொண்டு அடையாளப் படுத்துவதில் மிகவும் உதவும்.

இப்படியே நீங்களும் இதுல ஈடுபட்டுப் பாருங்களேன். எந்த ஊருக்குப் போனாலும் இதனை ஒரு ஹாபியாக வைத்துக் கொண்டால் அந்த ஊரு மனிதர்கள் அன்னியப் பட்டுப் போனாலும் இவைகளுடன் ஒரு வித நெருக்கத்தை உணர முடியும். மேலும், தினமும் ஒரு பறவையென உங்க சொந்தப் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும். தேவை ஆர்வம் அதனையே பழக்கமாக்கிக் கொள்வது வரைக்கும். குழந்தைகளை ஆரம்ப கால கட்டத்திலேயே ஆர்வத்தை வளர்த்து விட்டால், கோடை காலத்தில் தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் செலவு பண்ணும் நேரத்தை மிச்சப் படுத்தி இது போன்ற ஆரோக்கியமான விசயங்களை கற்றுக் கொண்டவர்களாவார்கள். முயற்சி பண்ணிப்பாருங்களேன்!

Sunday, April 12, 2009

வண்ணத்துப் பூச்சியின் உலகமும், பெண்களும்...!

வண்ணத்துப் பூச்சிகள் அவைகளின் வளர்சிதை மாற்றத்தினைக் (Metamorphosis) கொண்டும் இவைகள் பெண்களின் வளர்நிலையுடன் தொடர்பு படுத்தப் படுவதால் பெண்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் தொடர்பு படுத்தி இருப்பாங்களோ? மேலும் வண்ண வண்ணமா அத்தனை வகையான இனங்களாக அறியப்படுவதாலும் இவைகள் நம் உலகில் பெண்களுடன் தொடர்பு படுத்தப்பட்டு பெண்களும்-வண்ணத்துப் பூச்சிகளும் இரண்டர கலந்து விட்டதோ!

இப்போ இதப்பத்தி என்னாத்துக்கு இங்கே பேசுறேன்னு கேக்கப் போறீங்களா? இருங்க, நான் இன்னும் இயற்கை நேசி தளத்தை மறந்துடல. இங்கே நிறைய எழுதப்பட வேண்டியிருக்கு. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு பதிவில இப்படி ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ...

...//ஊர்ந்திடும் புழுவிலிருந்து நேர்முறையில் மாறிப் பறந்திடும் பட்டாம்பூச்சி அடுத்த பிறவியாக உருவாகிறது. ஆனால் பட்டாம்பூச்சி தன்னினம் பெருக்க முட்டை இடுவதுமில்லை //...

படிச்சவுடன் ஏற்கெனவே இந்த பூச்சிகளின் உலகம் ஒரு புரியா அதிசிய உலகம் அதிலும் குறிப்பாக இந்த வளர்சிதை மாற்றத்துனூடாக வரும் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை முறை ரொம்ப ஆச்சர்யமூட்டக் கூடியது.

இதனில் பின்னூட்டமிட்டவர் போலவே உயிரியல் ஆழமாக படித்திருக்க வாய்ப்புகிட்டாத எவருக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் இவைகளின் வாழ்க்கை முறை அறிந்து கொள்வதின் பொருட்டு. சரி, படிச்சவுடன் இதனைப் பற்றி ஒரு பதிவு போட்டு விடலாமே என்று தோணியதால் இந்தப் பதிவு.

இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை காணப்பெறலாம்.

நான் பார்த்து அதிசயித்ததிலேயே பறவை இறகு (Bird wing) என்றொரு வகையான வண்ணத்துப் பூச்சிதான் மிக்க பெரிதாக அரையடி நீளத்திற்கு (இறகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு இறகின் முனை) பெரிதாக நீல கண்ணைப் போன்ற புள்ளியுடன் கறுப்பு நிறத்தைக் கொண்ட பூச்சி. அழகோ! அழகு!!

பூச்சி வகைகளே உலகத்தில் அதிகப்படியான இன வகைகளாக அமையப் பெற்றதால் புதிது புதிதாக முன்னமே அறியப்படாத புது வகையான இனங்கள் நாளொருமேனியும் பொழுதொரு பூச்சியும் இருப்பதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா விதமான பூச்சி இனங்களும் முட்டையிட்டு அதன் பிறகு பல்வேறு வளர்ச்சி நிலைகளில் (developmental stages) படிப்படியாக முதிர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சி நிலைகளை வளர்சிதை மாற்றம் என அறியலாம். நாம் அறிந்த பூச்சி இனங்கள்லே இரண்டு விதமான வளர்சிதை மாற்ற முறை நடைபெறுகிறதாம்.

வெட்டுக்கிளி, புள்ளப்பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் தட்டாம் பூச்சி இவைகள்லே என்ன நடக்குதாம் முழுமையற்ற வளர்சிதை மாற்றம்; எப்படின்னா, முட்டையிலிருந்து வெளியே வந்தவுடன் இறக்கை மட்டுமில்லாம அதோட அம்மாப்பாவை ஒத்தே இருக்குதாம். இந்த பருவத்துக்கு பேரு நிம்ஃப்(Nymph) ஆம்.

இரண்டாவது வகையான வளர்சிதை மாற்றத்தைத்தான் முழுமையான வளர்சிதை மாற்றமா பார்க்கிறோம். இது பெரும்பாலும் எது மாதிரியான பூச்சிகள் உலகத்திலன்னா, வண்ணத்துப் பூச்சி, அந்துப் பூச்சி, வண்டுகள், ஈக்கள் மற்றும் குழவிகளில். இங்கே டிபிக்கலா நம்ம பெண்களுக்குத் தேவைப்படும் முறையான வளர்ச்சி மாதிரியே இதன் வளர்நிலையில எந்தவொரு தொந்தரவும்(interruption) நடைபெறாமே மலர்ந்து வரணும் போல.

நான்கு நிலைகளை (முட்டை, லார்வா, ப்யூப்பா மற்றும் அடல்ட்) இவைகள் தாண்டி வர வேண்டியதா இருக்கு, அதற்கு பல புறக்காரணிகளும் சாதகமா இருக்கிற பட்சத்தில தடையின்றி அடுத்த தலைமுறைக்கான குடும்ப பொறுப்பை ஏத்துக்க ரெடியாகிடுதுகளாம்.


இப்போ ஒவ்வொரு படியா(stage) தாண்டி நாமும் போவோம், ரொம்ப உள்ளர போயிடாம. அசராம வாங்க! படிக்க ஆர்வமா இருக்குங்கிறதுக்காக இப்போ நாம வண்ணத்துப் பூச்சிய மட்டும் சுட்டிப் பேசுவோம்.

எங்கெல்லாம் நான் பூச்சின்னு சொல்றேனோ அங்கே நீங்க வண்ணத்துப் பூச்சியா எடுத்துக்கோங்கப்பா.

முட்டை (Egg): நாம எல்லாம் சாதாரணமா பார்த்திருப்போம் ரெண்டு வண்ணத்துப் பூச்சிகள் இணைந்து பறந்துகிட்டு திரியுறதை. அதப் பிடிச்சி பார்த்தோம்னா அதில ஒரு ஆண், ஒரு பெண் இருப்பாய்ங்க. அதுக ரெண்டும் சேர்ந்து முட்டை தயார் செய்ற வேலையில இருக்குதுகன்னு மட்டும் எடுத்துக்குவோம், சரியா!

அதுக்குப் பிறகு பெண் பூச்சி என்ன பண்ணுது முட்டைகளை இலைகளின் அடிப்பாகத்திலோ இல்லன்னா இலைகளின் அடிக் காம்புகளில் நூற்றுக்கணக்கா இட்டு வைச்சிருதுகளாம். இந்த முட்டைகள் சில நேரத்தில ரொம்பச் சின்னதாவும் வெறுங் கண்ணாலே பார்க்க முடியாத அளவிற்கு கூட இருக்கும் போல. அது ஏன் காம்பிலேன்னு கேட்டீங்கன்னா, இலையே பட்டு கீழே விழுந்துட்டாவோ, இல்ல மற்ற ஜீவராசிகள் அந்த இலையை திண்ணுப்புட்டாக் கூட அதன் காம்பு மரத்துடன் இணைந்து இருக்குமிடத்தில் இருந்து போனா மிச்சம் மீதி முட்டைகள் பொரித்து அடுத்த படிக்கு முன்னேறுமில்லே, அதான்.

சரி, இந்த முட்டையிடுற காலம் தாவரங்களில் உணவு கிடைக்கும் பருவ காலத்தை முன்னிட்டு இருக்குமாம். அப்பத்தானே அந்த கம்பளிப் புழு(cattepillar) நிலையில சாப்பிட நிறைய கிடைக்கும் அதுனாலே. இப்போ, இதிலருந்து அடுத்த படி என்னான்னா...

கம்பளிப் புழு நிலை (Catterpillar Stage): நாம இந்தப் பருவத்தை பார்த்திருக்கலாம் வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சி இனங்கள்லே. அதான் புழு மாதிரி வண்ண வண்ண நிறங்களில் அதன் உடம்பு முழுக்க முடி மாதிரியான சுனைகளுடன் ஊர்ந்து இலைகளை மென்னு மேய்ஞ்சிக்கிட்டே இருக்கிறதை.

இதன் முழு வேலையே சாப்பிடுறதுதான் பொழுதன்னிக்கும். ஏன்னா, இப்போ சாப்பிட்டு வைச்சிக்கிறதுதான் பின்னாளில் ரொம்ப உதவப் போகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டு. நான்கைந்து முறை இந்தப் பருவத்திலயே இதன் தோலுறித்தல் நடைபெற்றும் விடுவதால் நிறைய சக்தி தேவைப்படுது. இதன் பிறப்பு பருவத்திற்கும் இந்தப் படி நிலையின் வளர்ச்சி நிலைக்கும் வைச்சிப் பார்த்தா கிட்டத்தட்ட நூறு மடங்கு வித்தியாசத்தில உடம்பு போட்டுருக்குமாம். இப்படியே ஊர்ந்து, நகந்து அடுத்ததிற்கு போயி...

ப்யூப்பா நிலை(Pupa Stage): இந்த நிலையில சுத்தமா சாப்பிடுறதை நிப்பாட்டிட்டு மெதுவா நகர்ந்து இலையோட இலையாவோ, இல்ல மண்ணுக்குள்ளரயோ ஒரு மெழுகுக் கூட்டை கட்டிக்கிட்டு சுருண்டுக்கிறாய்ங்களாம் உள்ளரயே. இந்த சமயத்திலதான் முக்கியமான சிதைவுகள், மறு கட்டமைவுகள்னு உள்ளர பட்டைய கிளப்பிட்டு இருக்குதுகளாம். எங்கங்கோ மறைந்திருந்த செல்களிலுள்ள செய்திக் கோர்வைகளை கொண்டு எங்கே எந்த உடற் பாகங்கள் இருக்கணுமோ அவைகளை அங்கங்கே வைச்சு வளர்ரதெல்லாம் இந்த நிலையிலதான். இந்த வளர்ச்சி இரண்டு மாசத்திலும் நடை பெறலாம், இரண்டு வருஷமும் எடுத்துக்குமாம் அது கொடுக்கப்பட்ட இன பூச்சி வகையைக் கொண்டு அப்படி நடக்குதாம்.

என்னடா இது முட்டை வடிவத்தில கூட்டைக் கட்டிக்கிட்டு வெளியில வர ரொம்ப கஷ்டப்படும் போலவேன்னு நாம உடைச்சு கொஞ்சம் ஈசி பண்ணிடுவோம்னு நினைச்சு ஏதாவது பண்ணி வைச்சோம். அம்பூட்டுத்தான் அதோட மிச்ச மீதி வாழ்க்கை அப்படியும் இப்படியும்தான் (இப்போ ஒப்பீடு பண்ணிக்கோங்க பெண்/ஆண் குழந்தைக வளர்ச்சி நிலையில எங்காவது ஒரு சறுக்கல் நடந்தா என்னாகுதோ அதே தான் இங்கும்...).

ஒரு கொசுறுச் செய்தி, இந்த மெழுகுக்கூட்டை கட்டிக்கிது பார்த்தீங்களா அதத் தான் நாம இதே இனங்களிலே ஒண்ணா வார பட்டுப் புழுக்களை அந்த நிலையில் இருக்கும் பொழுது அவைகளை சிதைச்சிட்டு அந்த மெழுகுக் கூட்டை நாம லபக்கி "இந்தப் பட்டுப் புடைவை என்ன வெல தெரியுமா... 35 ஆயிரம ரூவான்னு" பீலா விட்டுக்கிட்டு இருக்கோம்ங்க. அதுவும் காந்தி பொறந்த, ஆன்மீகத்தில நெம்பர் ஒன் இந்தியாவில இந்த அநியாய்ம்ங்க.

அடல்ட் அல்லது இனப்பெருக்க நிலை: இங்கன வைச்சித்தான் நம்மில் பல பேருக்கு வண்ணத்துப் பூச்சின்னா என்னான்னே தெரியும். அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் பார்த்தீங்கன்னா நான் முன்னே கொடுத்திருந்த பின்னூட்டத்தில நினைச்சிட்டு இருந்தவங்க நிலைதான். எல்லாம் கடவுள் அந்தரத்தில இருந்து தொபுக்கடீர்னு வண்ண வண்ணமா பறக்க விட்டுடுறார்ங்கிற அளவில.

இந்த நேரத்தில வைச்சிப் பார்த்தா எத்தனை விதமான இயற்கை நடத்தும் விந்தைகள்னு நினைச்சு ஆச்சர்யப்படுவோமில்லையா. ஏன்னா, புழுவா இருக்கும் பொழுது சில நேரத்தில குட்டைக் கால்களும், பல கண்கள் மாதிரியுமா இருந்திருக்கும். அடல்டா பார்க்கும் பொழுது நீண்ட கால்கள், கூட்டுப் பார்வை கிட்டக் கூடிய கண்கள், அழகான நிறத்தில் உள்ள இறக்கைகள் அப்படின்னு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விசயங்கள் கூட்டுக்குள்ளர நிகழ்ந்துருச்சே. நம்ம மனுசப் பசங்களும் இப்படித்தானே!

இதில பார்த்தீங்கன்னா இவ்வளவு ரசிச்சுப் பார்க்கிறோம்ல இவைகளை, ஆனா, இதுகளில் ஒரு சிலது தான் சாப்பிடுதாம். அதுவும் பூக்களில் உள்ள நெக்டார்களை உணவாக. பெரும்பான்மையானது சாப்பிடுறதே இல்லையாம். வந்ததே தன்னோட பார்ட்னரை கண்டுபிடிச்சு இனப்பெருக்கம் பண்ணத்தாங்கிற அளவில பறந்து திரிஞ்சு ஆளையும் கண்டுபிடிச்சு வேலையை ஆரம்பிச்சிடுதுகளாம். கடமையே கண்ணாயிரமா!

இந்த நிலையில இந்த நெக்டார்களை (தேன்) எடுக்குதில்லையா அப்போ அப் பூக்களிலுள்ள மகரந்தத் தூளை போட்டு பொரட்டிக்கிட்டு அடுத்த பூவிற்கு விஜயம் பண்ணும் பொழுது அங்கே கொண்டு போயி அதுகளை விட்டுடுதா அதுனாலே மரங்கள் இனப்பெருக்கம் பண்ண உதவிப் போடுதுகள். எப்படி இயற்கையின் பரிணாம செட் அப்பு. ஒன்றை நம்பி மற்றொன்று.

இந்த நிலையில ஒரு சில பூச்சிகள் கால சுழற்சியை(குளிர் காலத்து) ஈடுகட்ட பல மாதங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்(Hibernation) போயிடுரதுமுண்டாம். ஆனா, பல வகை பூச்சிகளில் இதனோட வாழ்க்கை கால அளவோ இரண்டிலிருந்து மூன்று வாரத்திற்குள்ளே முடிஞ்சிடுதாம். என்னே ஒரு வாழ்க்கை சுழற்சி வண்ண வண்ணமா!
Related Posts with Thumbnails