Saturday, July 24, 2010

விபத்தாக சந்தித்த பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

...This post is being transported from Thekki to Nesi, plz excuse if you have read this article already, thanks...


எங்களுடைய பயணம் அன்று தஞ்சாவூரிலிருந்து தொடங்கியது. கரம்பக்குடிக்கும், தஞ்சாவூருக்குமான வித்தியாசம் (40கிமீ களுக்குள்) இயற்கையின் அமைப்பில் இராமநாத புரத்திற்கும் கோயம்புத்தூருக்குமான வித்தியாசங்களைப் போன்றே விரிந்து கிடக்கிறது. கரம்பக்குடியின் பாலைவனவாக்கம், ஒரு முறைக்கு மற்றொரு முறை செல்லும் பொழுதிற்கான வித்தியாசங்களை காணும் பொழுது, பாலையேற்றம் தன் கைகளை அகல விரிப்பது ரொம்பவே கண் கூடாக இருக்கிறது. ஏதோ ஒரு காலக் கட்டத்தில் புதுக்கோட்டையை ஆண்ட ஒரு புண்ணியவான் அந்தக் காலத்தில காவேரி கால்வாய்களே உள்ளே வராத மாதிரி பார்த்துக் கொண்டாராம்.

ஏன்னா, தண்ணீரால் கண்டமென்று ஒரு குறிப்பிட்ட சமூகம் எண்ணியதால், கால்வாய்களின் வழியாக வெள்ளம் ஊருக்குள் வந்துவிடும் அபாயமிருக்கிறதென்று, அப்படி ஒரு புத்திசாலித்தனமான முடிவு எடுத்து இருந்திருக்கிறார்கள் :-( அது ஒரு தனிக் கதை. கரம்பக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தாண்டி தஞ்சை எல்லைக்குள் இருக்கும் இடையாத்தியில் ஓடும் காவேரிக் கால்வாய் தண்ணீர் என்னை அவ்வப் பொழுது பொறாமை கொள்ள வைக்கும். இப்பொழுதோ காய்ந்து கிடக்கும் வயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, பெருகி வரும் வீடுகளும் அதனையொட்டிய தேவைகளுக்கான திண்டாட்டங்களும், கொழுத்து வளர்ந்து போன கொசுக்களுமாக நீக்கமற எங்கும் வியாபித்து இதிலிருந்து தப்பிப்பதற்கான அடுத்த வழி என்ன என்று விழி பிதுங்க வைக்குமளவிற்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

நான் சென்றிருந்த சமயத்தில் கர்நாடகாவில் நல்ல வெள்ளம் போல காவேரிக்கரைகள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு. அவர்களும் தங்களின் நெஞ்சாங்கூட்டை அகல விரித்து நம்மூர் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டிருந்தார்கள். அது தஞ்சாவூரின் பசுமையைக் கொண்டே புரிந்து கொள்ள முடிந்தது.

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரியை காண முடிந்தது. ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே, கரம்பக்குடியின் பஞ்ச நிலையிலிருந்து ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.


அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்...

இந்தப் பதிவு தொடர்பான கருத்துக்களை வாசிக்க இங்கே அழுத்தவும்... to read readers' comments please click here...

P. S: சரணாலயத்தைப் பற்றிய சில விபரங்கள்: 1999ஆம் வருடம் இந்தப் பறவைகள் சரணாலயம் உருவாக்கப்பட்டதாகவும், மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்கென திறந்து விடப்படும் தண்ணீர் இங்கு சேமிக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதாகவும், வட கிழக்கு பருவமழையின் போது இயல்பாக பெறப்படும் மழைநீரும் சேர்ந்து இங்கு பறவைகள் இறங்கி ஏற வழிவாகை செய்து விடுகிறதாம். ஏறத்தாழ 40 வகையான நீர்ப் பறவைகள் வந்து செல்வதாக தமிழக வனத் துறை செய்தி கையேடு தெரிவிக்கிறது.

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

....This post is being transported from thekki to Nesi... plz excuse if you have read this post already...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.

உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.
P.S: இதனையொட்டிய கருத்துக்களுக்கு இங்கே அழுத்துங்க... to read the readers' comments please click here.

Saturday, March 06, 2010

விலங்குகளின் சாலை மரணங்கள்: Road Killings

கோடை காலத்தில் நம்மில் பலர் மலையும் மலை சார்ந்த சுற்றுலாத் தளங்களுக்கு குளிர்ச்சியை நாடி சென்றிருக்கக் கூடுமல்லவா? அது போன்ற பயணங்கள் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும், மனது முழுக்க ஆச்சரியங்களையும் அள்ளி அள்ளி வழங்கியிருக்கவும் வாய்ப்புகள் அனேகம்தானே? முகத்தில் சில்லெனப் பட்டுத் தெறித்து, தூக்கத்தைத் தூரமாக எட்டி வைக்கும் தூய்மையான காற்று, நாசியில் இறங்குவதே தெரியாமல் இறங்கிக் கொண்டிருக்கும் சுகமே ஒரு அலாதியான அனுபவம்தானே!

சில உயரமான மலை உச்சியின் முகடுகளில் நாம் பயணிக்கும் பேருந்து இப்பவோ, அப்பவோ சாய்ந்துவிடுவேன் என்று ஒரு பக்கமாகச் சாய்ந்து செல்வதைக் கூட மறக்கடிக்கும் நிலையில், வெளியில் நமக்குக் காட்சியாக பரந்து விரிந்து மரங்களடர்ந்த மலை முகடுகள், மேகங்களை தன் மேல் கிடத்திக் காட்டும் நிகழ்வைப் பார்த்து நமது பயணம் நீண்டு கொண்டே சென்றிருப்பதனைப் பருகியிருப்போம்.

இப்படியான பயணங்களில் நாம் அமர்ந்து பயணிக்கும் பேருந்துகளின் சத்தமும், சக்கரங்களும் அங்கு வாழும் உயிரினங்களுக்கு எது போன்ற விளைவுகளை விட்டுச் செல்கிறது என்று யோசித்திருக்க வாய்ப்பில்லைதானே. இன்று மனிதன் கால் வைக்காத, வசிக்க முயற்சிக்காத இடமே இந்தப் பூமியிலில்லை என்கிற அளவிற்கு, எல்லா இடங்களிலும் நாம் நிறைந்திருக்கிறோம். இன்றைய உலக மொத்த மக்கள் தொகையாக ஏழு பில்லியன் மக்களைக் கொண்டு நாம் நெருங்கிவருவதாகத் தெரிகிறது.

அதனை ஒட்டிய மனிதத் தேவைகளும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது. அதிலும் குறிப்பாக அன்றாடத் தேவையான மக்களின் இடப்பெயர்வு பொருட்டு நமக்குத் தேவையான வாகனங்களின் பெருக்கம், நம் மொத்த மக்கள்தொகை எண்ணிக்கையைக் காட்டிலும் இன்று அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். குறிப்பாக வளர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் தொகையை விட அந்நாடுகளில் பெருகி நிற்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

நாம் அன்றாடம் வாகனங்களில் பயணிக்க நேரும் பொழுது சாலையோரங்களில் ஏதாவது விலங்குகள் அடிபட்டு இறந்து கிடப்பதனை ஒரு சாதாரண நிகழ்வாக எண்ணி கடந்து போய்விடுகிறோமல்லவா? நம் கண்ணுக்குப் பெரிதாக காணக்கிடைக்கும் விலங்குகளின் உடல் பருமனைக் கொண்டு, அவ்வாறு அடிபட்டு இறந்து போன, அல்லது நம் வாகனத்திலேயே சிக்கிய விலங்குகளைத்தான் அறிகிறோம். ஆனால், அடர்ந்த வனப் பகுதிகளில் பயணிக்கும் பொழுது நம் கவனத்திற்கு வராமலேயே எத்தனையோ விதமான சிறு ஜீவராசிகளான முதுகெலும்பற்ற வகைப்பிராணிகளும் (பூச்சிகள், மெல்லுடலிகள்), ஊர்வன வகை, தவளை, சிறு பாலூட்டிகள், பறவைகளென நசுங்கி இறக்க நேரிடலாம்!

இது போன்ற அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஜீவராசிகளில் பல இன்னமும் நம் அறிவியல் உலகில் கண்டறியப்படாததாகவும் இருந்திருக்கக் கூடும். என்னுடைய அனுபவத்தில் மழைக்காடுகளின் முக்கியச் சாலைகளின் இருமருங்கும் அடிபட்டு நசுங்கி இறக்கும் வகைகளில் அதிகமாக காணப்பெற்றது, தவளைகளைத்தான். அதுவும் நன்றாக மழை பெய்யும் காலங்களில், சற்றே கூடுதலான எண்ணிக்கையில் கண்டிருக்கிறேன்.


இந்தத் தவளைகள் இயற்கையின் நாடித் துடிப்பறியும் ஒரு மானியைப் (indicator species) போன்றது என்றால் அது மிகையாக இருக்க முடியாது. அவைகளில் பல வகையான தவளைகள் இன்னமும் நம் ஊர்க்காடுகளில் அறிவியல் உலகத்தால் அடையாளப்படுத்தப்படாமல் கூட வாழ்ந்து கொண்டிருக்கலாம். அவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் இயற்கையின் உணவுச் சுழற்சியிலும், விதை பரவலிலும் பங்காற்றிக் கொண்டிருக்கலாம். இது தவளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறிவிட இயலாது. ஏனைய வித அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

இது போன்ற ஜீவராசிகள் தொடர்ந்தே இருந்திருக்க வேண்டிய வனங்கள், துண்டாடப்பட்டு சிறு சிறு தீவுகளாக (fragmented landscape) மிக நீண்ட இடைவெளிகளைக் (தேயிலை, காப்பி) கொண்டோ அல்லது வாகனங்கள் செல்லுவதற்கான சாலைகளை அமைத்தோ காடுகள் துண்டாடப்படுவதால், இந்தச் சிறு உயிரினங்கள் நேரடியாக நமது பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

அண்மையில் அமெரிக்கா, இண்டியானா மாநிலத்தில் வாகனப் போக்குவரத்தால் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பு சார்ந்து 11 மைல்கள் நீண்ட சாலையில் 17 மாதங்கள் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அவ்வாராய்ச்சியின் முடிவாக கண்டறியப்பட்டது நம்மையெல்லாம் ஒரு கணம் திகைக்கச் செய்வதாக அமைகிறது. இந்த 11 மைல் நீண்ட சாலையில் மட்டுமே கிட்டத்தட்ட 10,500 விலங்குகள் அடிபட்டு மரணித்ததாக அறியப்பட்டது. இவைகளில் தவளையினங்களில் மட்டுமே 7,600ஆகவும் அவைகளில் பெரும்பாலானவை அது என்ன வகைத் தவளை என்று கூட அறிந்திருக்கவில்லையாம். ஏனைய எண்ணிக்கையை மற்ற இன வகை உயிரினங்கள் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது.

மேலே கூறிய ஆராய்ச்சி குளிர்கால நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடத்தப்பட்டதன் முடிவு; அந்த நாட்டுக் காடுகள் வெப்பமாறாக் காடுகளைப் போன்று அதிக எண்ணிக்கையிலான ஜீவராசிகளை கொண்டிருப்பதில்லை. இந்தியா, இலங்கை போன்ற மழைக்காடுகளைக் கொண்ட நாடுகளில் வாகனங்களால் மரணத்திற்குள்ளாகும் விலங்குகளின் எண்ணிக்கையை ஒப்பீடு செய்து பார்த்தால் நம் கற்பனைக்கும் எட்டாத அளவில் பல வகை சிறு விலங்கினங்கள் தினமும் பெருமளவில் துடைத்தெறியப்பட்டுக் கொண்டிருக்கலாமோ என்றளவில் கூட எண்ணச் செய்கிறது.

பெரும்பாலும் சாலைகள் மிகக் குறுகலாகவும், வளைவுகளுடனும் இருக்கும் பொருட்டு குறுக்காக கடக்கும் பெரிய, சிறிய உயிரினங்களுக்கு விபத்து நடந்து விடாமல் கடந்து செல்வதற்கு போதுமான அவகாசம் கிடைப்பதில்லை (வாகன ஓட்டிக்கும் கூட). அந்நிலையில் பெரிய விலங்கினங்களான மான், காட்டெருமைகளும் கூட இது போன்ற ஆபத்தில் சிக்கி உயிரிழக்க நேர்ந்துவிடுவதுண்டு.

நமக்கு மன மகிழ்வூட்டும் போக்கிடங்கள் தேவைதான் என்றாலும், இது போன்ற அசம்பாவிதங்கள் மென்மேலும் தொடராமல் இருக்க நம்மால் இயன்ற அளவிற்கு வாகன நெரிசல்கள் அது போன்ற மலைஸ்தலங்களில் பெருகாமல் இருக்க முடிந்த வகையில் உதவலாம். வனச்சாலைகளில் செல்லும் பொழுது வாகனங்களின் வேகத்தை ஒரு மட்டுக்குள் ஓட்டிச் செல்வதும் பெரிய விலங்குகள் விலகிச் செல்ல போதுமான அவகாசத்தைக் கொடுக்க உதவலாம். மழைக்காலங்களில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்குப் பிறகு அவ்வூர்களுக்குச் செல்லும் வாகனங்களைக் கட்டுப்படுத்தலாம்.

இருக்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் உயிர்களுக்கே மதிப்பற்ற நிலையில், இது போன்ற சிறு உயிரினங்களுக்கெல்லாம் பாதுகாப்பு வழங்கப்படுமா என்பது ஒரு கேள்விக்குறியே!

பி.கு: ஈழ நேசனுக்காக எழுதியது. நன்றி!
Related Posts with Thumbnails