Saturday, July 24, 2010

இந்தியப் பயணத் தொகுப்பு ஒரு முன்னோட்டம்: w/pictures...

....This post is being transported from thekki to Nesi... plz excuse if you have read this post already...

மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எங்கிருந்து தொடங்குவது என்ற எண்ணத்தினூடையே இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். காணாமல் போன நான்கு வாரங்களும் நான் நேசிக்கும் என்னுடைய இந்தியாவிற்கு சென்றிருந்தேன். இந்தப் பயணத்தில் என்னுடைய இரண்டு வயது மகளும் இணைந்திருந்ததால் இம்முறை கொஞ்சம் தூக்கலாக இனிப்பும், கசப்புமாக அனுபவங்களை பெற நேர்ந்தது.

இந்த குறுகிய காலப் பயணத்தில் எனக்கு நான்கு நாட்கள் சுவாசம் சார்ந்த சுகவீனமும், நான்கைந்து நாட்கள் என்னுடைய மகளுக்குமாக மருத்துவமனை, மருத்துவ வாசற் காத்திருப்பு என்று நாட்களை கழித்திருந்தேன், இருப்பினும் என்னுடைய ஊர்ச் சுற்றலுக்கு ஒன்றும் குறைச்சலில்லை.

அப்பாடா என்று ஒரு நிமிசம் உட்கார்ந்து யோசிக்கும் பொழுது இங்கெல்லாம் நாம் சென்று வந்தோமா என்று மலைப்பாக இருக்கிறது. கோடியக்கரை, முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி (லகூன்), கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து வெள்ளியங்கிரி, சிறுவாணி வனத்தினூடாக மேல் அணைச் சென்று அங்கிருந்து மலம்புழா அணை சென்று பார்த்து விட்டு பாலக்காடு வழியாக மீண்டும் கோவை என எனது பயணம் அமைந்திருந்தது.

ஒவ்வொரு இடத்திற்கு சென்றிந்த பொழுதும் கஞ்சத்தனம், வெட்கம் பார்க்காமல் இதைத்தான் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற விவஸ்தை இல்லாத அளவிற்கு படங்கள் எடுத்தும் தள்ளியாகிவிட்டது; அந்தப் படங்களைக் கொண்டு பின்னாளில் எழுத நிறைய கிடைக்கக் கூடும் என்ற முன் யோசனையின் பேரில். எனவே, மக்களே கலந்து கட்டியாக என்னிடமிருந்து நிறைய அறிவியல், ஊர் சார்ந்த நினைவோடை மற்றும் அதனைச் சார்ந்த, எப்பொழுதும் நான் நிகழ்த்தும் புலம்பல்களும் அவ்வப் பொழுது வரலாம்.

உடனடியாக எழுத நினைப்பவைகளிலிருந்து சில உங்களின் பார்வைக்கு ஒரு முன்னோட்டமாக:

1) நமது சக வலைப்பதிவரும் தன்னார்வ தொண்டில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ராஜி அவர்களுடன் வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் ஒரு ட்டூர். ஒரு நாள் முழுதுமே அங்கு அமைந்திருந்த சர்வதேச பள்ளி மற்றும், ஈஷா வித்யா என்ற பெயரின் கீழ் பிற்படுத்தப் பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் குழந்தைகளுக்குமான (ஈஷா அறக்கட்டளையின் வாயிலாக ஆலந்துரை அருகே அமைந்திருக்கும்) பள்ளிக்கும் சென்றிருந்தோம் அங்கு நிறைய ஆச்சர்யங்களும், வாயைக் கட்டிப் போடும் அளவிற்கு நமது தோழியின் உழைப்பும் ஒருங்கே காணக் கிடைத்தது. அதனை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் படங்களுடன் ஒரு பதிவு.



2) கோடியக்கரை சென்ற பொழு அது பறவைகள் நிரம்பி வழிய வேண்டிய அக்டோபர் மாதம், ஆனால் சில அதிர்ச்சியூட்டும் உண்மைத் தகவல்கள் ஏன் அது போன்ற பறவைகளின் வரவை குறைத்திருந்தது என்று தெரிந்து கொள்ள முடிந்ததை உங்களின் பார்வைக்கும் வைக்கிறேன்.



3) முத்துப் பேட்டை அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சதுப்பு நிலக் காட்டில் (லகூன்) ஒரு நாள் முழுக்கவும் படகில் மிதந்த அனுபவம், அந்தக் காட்டில் நான் கண்ட இயற்கையின் விந்தைகளை படங்களுடன் ஒரு நாள் விவரிக்கிறேன்.



4) மீண்டும் டாப்ஸ்லிப் சென்ற பொழுதினில், அங்கு செமையான மேக மூட்டம் அதனால் சென்ற வாகனத்திலேயே கோழிகாமுத்தி யானைகள் முகாம் வரையிலும் சென்று அங்கு பூவனின் குடும்பத்தாரை சந்தித்த நெகிழ்ச்சியூட்டும் ஒரு சந்திப்பும், என்னுடைய டாப்ஸ்லிப்னூடான நினைவோடையும் படங்களுடன் மீண்டும் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.



அதுமட்டுமின்றி இன்னும் நினைவில் தைத்துப் போன விசயங்களையும் நினைவிலிருந்து வெகு தொலைவு செல்வதற்கு முன்பாக இங்கு பதிந்து வைத்து விட மேண்டுமென்று எண்ணிக் கொண்டுள்ளேன், பார்க்கலாம்.

அன்புடன்,

தெகா.
P.S: இதனையொட்டிய கருத்துக்களுக்கு இங்கே அழுத்துங்க... to read the readers' comments please click here.

No comments:

Related Posts with Thumbnails